;
Athirady Tamil News

ஜனாதிபதியை சந்தித்து பேச தி.மு.க. தொடர்ந்து தீவிர முயற்சி- சட்ட அமைச்சர் ரகுபதியும் டெல்லியில் முகாம்!!

0

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்கியது. அரசு தயாரித்து கொடுத்த உரையின் ஒரு சில பகுதிகளை கவர்னர் ஆர்.என். ரவி படிக்காமல் தவிர்த்தார். இதையடுத்து கவர்னருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.

அவர் தீர்மானத்தை வாசித்து கொண்டிருந்த போது கவர்னர் ஆர்.என். ரவி அவையைவிட்டு வெளியேறினார். தேசியகீதம் பாடப்பட்டு அவை முடிவடைவதற்குள் கவர்னர் வெளியேறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கவர்னரின் செயலுக்கு தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் தமிழக சட்டசபையில் கவர்னர் நடந்துகொண்ட சபை மீறிய செயலை ஜனாதிபதியிடம் புகார் தெரிவிக்க தி.மு.க. எம்.பி.க்.கள் முடிவு செய்தனர்.

அதற்காக நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க கடிதம் கொடுத்துள்ளார். தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, திருச்சி சிவா உள்ளிட்ட எம்.பி.க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். ஜனாதிபதியை சந்திக்க நேற்று இரவு அவர்கள் டெல்லி சென்றனர். கூட்டணி கட்சி எம்.பி.க்களும் உடன் உள்ளனர்.

இதற்கிடையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் முகாமிட்டுள்ள தி.மு.க. எம்.பி.க்கள்., ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். ஆனால் இதுவரையில் நேரம் ஒதுக்கப்படவில்லை. ஜனாதிபதியை சந்திக்க வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் தமிழக சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதம் குறித்து புகார் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.