;
Athirady Tamil News

குமரி கடலில் விசைப்படகு மீது வெளிநாட்டு கப்பல் மோதியது: தத்தளித்த 14 மீனவர்கள் மீட்பு!!

0

குளச்சல் மரமடிய தெருவை சேர்ந்தவர் குருசப்பன். இவரது மகன் ரெஸ்லின் டானி (வயது 38). இவர், அதே பகுதியை சேர்ந்த 4 பேருடன் பங்குதாரராக சேர்ந்து விசைப் படகு வைத்து மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். கடந்த 12-ந்தேதி வழக்கம் போல் இவரது படகு குளச்சல் மீன்பிடித்துறை முகத்திலிருந்து புறப்பட்டு ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றது. படகில் ரீகன் (36), ஜார்ஜ் (43), மர்வின் (37), ராமன் துறையை சேர்ந்த சோனி (53), ஜாண்சன் (50), சின்னமுட்டத்தை சேர்ந்த தியோ (33), அழிக்கால் எட்வின்ராஜ் (27), சிபு (27) மற்றும் ஒடிசாவை சேர்ந்த கேதர் ஜெனோ (28), அமீர் (43), உ.பி.யை சேர்ந்த கமலேஷ் (26), லோகேஸ் (23), பின்று (21), ஆகிய மீன்பிடித்தொழிலாளர்களும் சென்றனர். இவர்களது படகு கன்னியாகுமரி கடல் பகுதியிலிருந்து 69 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருந்தது.

அப்போது அந்த வழியாக சென்ற லைபீரியா நாட்டை சேர்ந்த போஸ்டன் என்ற எண்ணெய் கப்பல் எதிர்பாராமல் இவர்களது விசைப்படகு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படகிலிருந்த மீனவர்கள் தூக்கி வீசப்பட்டு படகுக்குள்ளேயே விழுந்தனர். அவர்கள் என்ன நடந்தது? என்பதை அறிவதற்குள் படகு சாய்வாக சரிய தொடங்கியது. கப்பல் மோதியதில் படகில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு விரிசல் விழுந்தது. படகின் உள்அறைகளிலும் பெரும் உடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து படகை இயக்கினால் படகுக்குள் தண்ணீர் புகுந்து விடும் என்பதால் அருகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மற்றொரு படகிற்கு தகவல் தெரிவித்து உதவிக்கு அழைத்தனர்.

இருப்பினும் படகு நிலை தடுமாறி தொடர்ந்து சரிய தொடங்கியதால் 14 மீனவர்களும் பீதியடைந்தனர். அவர்கள் கூச்சலிட தொடங்கினர். பின்னர் சிறிது நேரத்தில் உதவிக்கு அழைத்த படகு விரைந்து வந்து 14 மீனவர்களையும் மீட்டது. விசைப்படகையும் மீட்டு நேற்று காலை குளச்சல் மீன்பிடித்துறைமுகம் கொண்டு வந்தனர். கப்பல் மோதிய வேகத்தில் மீனவர்களுக்கு உள்காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சேதமடைந்த விசைப்படகின் மதிப்பு ரூ.1.25 கோடி என கூறப்படுகிறது. இது குறித்து ரெஸ்லின் டானி குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்தார். மரைன் போலீசார் சேதமடைந்த படகை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் மேற்கூறிய போஸ்டன் கப்பல் மீது வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் நவீன் விசாரணை நடத்தி வருகிறார்.

குமரி கடலில் விசைப்படகு மீது வெளிநாட்டு கப்பல் மோதிவிட்டு சென்ற சம்பவம் மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்ட இந்த படகு மீது கப்பல் மோதியதும் நங்கூரத்தின் கயிறு கப்பலின் பிரப்பலரில் சிக்கியது. இதனால் படகை சிறிது தூரம் கப்பல் இழுத்து சென்றது. இதை கவனித்த மீனவர் மெர்வின் நங்கூரத்தின் கயிறை அறுத்து விட்டு படகை விடுவித்தார். பின்னர் வி.எச்.எப்.-16 ஒயர்லெஸில் காப்பாற்றுமாறு மீனவர்கள் கப்பலுக்கு தகவல் தெரிவித்தும், கப்பல் ஊழியர்கள் அதை பொருட்படுத்தாமல் சென்றுவிட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.