;
Athirady Tamil News

சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு!!

0

கொழும்பு கண்டி பிரதான வீதியில் வரக்காபொலயில் இருந்து அம்பேபுஸ்ஸ வரையிலான வாகன போக்குவரத்து இன்று (24) முதல் ஒரு நிரலுக்கு (ஒரு வழி போக்குவரத்து) வரையறுக்கப்பட்டிருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த பிரிவு வீதி காபட் இடப்பட்டு சீர்செய்யப்படவுள்ளதால் இன்று (24) தொடக்கம் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி வரையில் வாகன போக்குவரத்தை ஒரு நிரலுக்கு வரையறுக்கப்பட்டிருப்பதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இந்த வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என்பதினால் வரக்காபொலயில் இருந்து அம்பேபுஸ்ஸ வரையிலான பாதை ஊடாக பயணிப்பதற்கு எதிர்பார்க்கும் வாகன சாரதிகள் மற்றும் பொது மக்கள் முடிந்த வரையில் மாற்று வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதேபோன்று கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி வரும் வாகனங்கள், மாவனல்லை ரம்புக்கணை வீதியின் ஊடாக குருநாகல் வரையில் பயணித்து அதிவேக நெடுஞ்சாலை அல்லது பொதுவான வீதியூடாக மீரிகம ஊடாக பஸ்யால சந்தியில் பிரவேசித்து அல்லது கேகாலைக்கு வந்த பின்னர் பொல்காவல, அலவ்வ, மீரிகம ஊடாக பஸ்யால சந்திக்கு பிரவேசித்து கொழும்பை நோக்கி பயணிக்க முடியும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று கொழும்பில் இருந்து கண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் பஸ்யால சந்தியில் மீரிகம ஊடாக அதிவேக நெடுஞ்சாலை அல்லது பொதுவான வீதி ஊடாக குருநாகலை அண்மித்த பின்னர் கண்டியை நோக்கி பயணிக்க முடியும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.