;
Athirady Tamil News

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட வீட்டுக் கடன்கள் மீண்டும் ஆரம்பம்!!

0

கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீட்டுக் கடன்கள் மற்றும் உதவிகள் மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் எதிர்வரும் தவணையைப் பயனாளிகளுக்கு கடன் மற்றும் உதவிகளை வழங்குவதற்காக வீடமைப்பு உதவி வாரம் அறிவிக்கப்படும்.

இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான ஒரு வார காலத்துக்குள் இந்தக் கடன் மற்றும் உதவித் திட்டங்களை அடுத்த தவணையாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கினார்.

பத்தரமுல்லையில் கடந்த வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் முடியும் வரை புதிய திட்டங்களை ஆரம்பிக்க வேண்டாம் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கினார்.

கடந்த அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகள் புதிய கருத்தாக்கம் எனக்கூறி, பல்வேறு அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்ததும் இடைநடுவில் நிறுத்தப்பட்டதாகவும், இதனால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், பழஒய திட்டங்களை முடித்து விட்டு அதன் பின்னர் புதிய பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

2020 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இரண்டு கடன் மற்றும் உதவி திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. “உங்களுக்கு வீடு – நாட்டிற்கு நாளை” மற்றும் “மிஹிந்து நிவஹன” ஆகிய இரண்டு திட்டங்கள் ஆகும்.

கடந்த கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்தத் திட்டங்களின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது தவணைகளுக்கான கட்டணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. “உங்களுக்கு வீடு – நாட்டிற்கு நாளை” என்ற திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கிராம சேவைப் பிரிவிலும் ஒரு வீடு கட்டுவதற்கு வீட்டு உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் கீழ், 1,885 வீடுகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டதுடன், எஞ்சிய தவணைகளை செலுத்துவதற்கு அதிகாரசபை 283 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. மேலும், “மிஹிது நிவஹன” வீடமைப்புத் திட்டத்தின் 58 வீடுகளுக்கு எஞ்சிய ஒதுக்கீட்டை வழங்க 9 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் வடக்கு கிழக்கு மற்றும் பெருந்தோட்ட மக்களுக்கு புதிய வீடமைப்பு உதவித் திட்டத்தை ஆரம்பிக்குமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்களின் பாதுகாப்புக்காக 300 மில்லியன் ரூபா வைப்புத் தொகையாக வழங்கப்பட்டுள்ளதாக இங்கு உரையாற்றிய தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திரு.ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்தார். மாதாந்த மீளப் பெறல் மூலம் பெறப்படும் தொகையில் இருந்து 50 மில்லியன் ரூபா இந்த வைப்பு நிதிக்காக மாதாந்தம் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தலைவர் தெரிவித்தார். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தற்போதைய ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 1,800 ஆகும். விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் பணிப்புரைக்கமைய இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தலைவர் தெரிவித்தார். மீண்டும் தொற்றுநோய், பொருளாதார மந்தநிலை மற்றும் நாடு மூடப்படும் நிலை எப்பொழுது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதை வலியுறுத்திய தலைவர், இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கி நிறுவனத்தை பேணுவதே இந்த வைப்புத்தொகையின் நோக்கமாகும் என்றும் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.