;
Athirady Tamil News

கலாஷேத்ரா விவகாரம்- செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு !!

0

மத்திய அரசின் கலாசாரத்துறையின் கீழ் சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா நாட்டிய கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து மத்திய, மாநில மகளிர் ஆணையம் சார்பில் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள், பேராசிரியர் ஹரி பத்மன், உதவியாளர்கள் சாய் கிருஷ்ணன், சஞ்ஜித் லால், ஸ்ரீநாத் ஆகிய 4 பேர் மீது பரபரப்பு புகார்களை சொன்னார்கள்.

இதனை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை ஏற்று மாணவிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவி ஒருவர் அடையார் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பேராசிரியர் ஹரி பத்மன் மீது பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில், ஹரி பத்மன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், உல்லாசத்துக்கு வீட்டுக்கு அழைத்ததாகவும், அவரது தொல்லை தாங்காமல் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டதாகவும் கூறியிருந்தார்.

இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி, கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 3 கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். பாலியல் புகார் தொடர்பாக பேராசிரியர் ஹரி பத்மன் இன்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பாலியல் புகார் தொடர்பாக கல்லூரிக்கு ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கல்லூரிக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கலாஷேத்ரா கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.