;
Athirady Tamil News

ஆப்கனில் பெண்கள் நடத்தி வந்த வானொலிக்கு தடை – இசை ஒலிபரப்பியதால் நடவடிக்கை என விளக்கம்!!

0

ஆப்கானிஸ்தானில் பெண்கள் நடத்தி வந்த வானொலிக்கு அந்நாட்டு ஆட்சியாளர்களான தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றதை அடுத்து அந்நாட்டில் பெண்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, அந்நாட்டில் பெண்கள் நடத்தி வந்த ஒரே வானொலியான ‘சடை பனோவன்’ (பெண்களின் குரல்) என்ற வானொலிக்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர். இந்த வானொலி 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. இதன் 8 பணியாளர்களில் 6 பேர் பெண்கள். இது அந்நாட்டின் ஒரே பெண்கள் நடத்தும் வானொலியாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில், இந்த வானொலிக்கு அந்நாட்டின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார துறை தடை விதித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரத் துறையின் பிராந்திய இயக்குநர் மொயிசுதீன் அகமதி, ”ரம்ஜான் மாதத்தில் இசை ஒலிபரப்புவதன் மூலம் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகத்தின் கொள்கைகளை இந்த வானொலி தொடர்ந்து மீறி வருகிறது. அதன் காரணமாகவே இந்த வானொலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகத்தின் கொள்கையை ஏற்பதாகவும், இனி இதுபோன்று நிகழாது என்றும் அந்த வானொலி உறுதி அளித்தால் தடை விலக்கிக்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.

எனினும், தலிபான்களின் இந்த குற்றச்சாட்டை அந்த வானொலியின் நிலைய மேலாளர் நஜியா சொரோஷ் மறுத்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ”ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகத்தின் விதிகளை நாங்கள் தொடர்ந்து மீறி வந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையல்ல. நாங்கள் எந்த வகையான இசையையும் ஒலிபரப்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

சர்வதேச கண்காணிப்பு அமைப்புகள் அளித்துள்ள புள்ளி விவரப்படி, ஆப்கானிஸ்தான் மிகப் பெரிய நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக, உலகிலேயே உணவுத் தட்டுப்பாடு ஆப்கானிஸ்தானில்தான் அதிகமாக உள்ளது. அதிகப்படியான மக்கள் உணவுக்காகத் தவித்து வருகின்றனர். அதேபோல், தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அந்நாட்டில் மனித உரிமை மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு எதிராகவும், மத சிறுபான்மையினருக்கு எதிராகவும் தலிபான்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, பொது நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வது, சுகாதாரம் ஆகியவை மறுக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.