மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு கருத்து பரப்பியதால் கைது- உமா கார்கியை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி!!
கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் உமா கார்கி (வயது 56). பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கருணாநிதி, பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் பற்றி அவதூறு தகவல்களை பரப்பியதாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் தி.மு.க. பிரமுகர் ஹரீஷ் என்பவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் அவதூறு பரப்புதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உமா கார்கியை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் உமா கார்கியிடம் சில தகவல்களை பெற வேண்டி இருந்ததால் அவரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் கோவை 4-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, கைதான உமா கார்கியை ஒரு நாள் மட்டும் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். அதன்படி போலீசார் உமாகார்கியை இன்று ஒரு நாள் மட்டும் காவலில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.