;
Athirady Tamil News

மீண்டும் போர்? ஜோர்டான், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!

0

ஜோர்டான், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், கடந்த திங்களன்று (ஜூன் 9) ஹோர்முஸ் நீரிணை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிகாப்டரை ஈரானிய படைகள் சுட்டுவீழ்த்தின.

இதனைத் தொடர்ந்து, ஹெலிகாப்டர் சுட்டுவீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக, ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் அமைந்துள்ள ஈரானிய தளங்களைக் குறிவைத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தின. இதனால், வளைகுடா நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், ஜோர்டான் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்களின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக, ஈரானிய படைகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

இதுபற்றி, ஈரானிய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜோர்டானின் அல் அஸ்ரக் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத்தின் எஃப்-35 போர் விமானங்களின் மீதும், அமெரிக்க கட்டுப்பாட்டு மையத்தின் மீதும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா தங்கள் நாடுகளில் உள்ள தளங்களைப் பயன்படுத்தாமல் தடுத்த நிறுத்த வேண்டியது வளைகுடா நாடுகளின் பொறுப்பு எனக் கூறியுள்ள ஈரானிய ராணுவம் இதுவரை அமெரிக்காவின் 4 முக்கிய தளங்களை அழித்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஆனால், ஈரான் ஏவிய ஏவுகணைகளை இடைமறித்து தகர்த்துள்ளதாகவும்; இந்தத் தாக்குதலால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் ஜோர்டான் மற்றும் பஹ்ரைன் ராணுவங்கள் தெரிவித்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.