;
Athirady Tamil News

எகிப்து பயணம்.. முதல் உலகப்போரின்போது உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார் மோடி!!

0

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக கடந்த செவ்வாய்கிழமை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பை ஏற்று அமெரிக்கா சென்ற மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு அவர் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி, இரு தரப்பு பேச்சுவார்த்தை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அமெரிக்க பாராளுமன்ற கூட்டமர்வில் உரையாற்றினார். வெள்ளை மாளிகையில் அதிபர் விருந்து அளித்து கவுரவித்தார். இந்நிலையில் அமெரிக்காவில் தனது பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர், 2 நாள் பயணமாக எகிப்து புறப்பட்டு சென்றார். பிரதமராக பதவி ஏற்ற பிறகு எகிப்து நாட்டிற்கு முதல் முறையாக பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் எகிப்து நாட்டின் அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசியை சந்தித்து பேச உள்ளார்.

இதுதவிர எகிப்து அரசின் மூத்த தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் இந்திய சமூகத்தினரையும் மோடி சந்திக்க உள்ளார். கடந்த ஜனவரி மாதம் எகிப்து அதிபரின் அரசுமுறைப் பயணத்தின் போது, இரு நாடுகளும் தங்கள் உறவை மேலும் வலுப்படுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த சுற்றுப்பயணத்தின்போது கெய்ரோவில் உள்ள ஹெலியோபோலிஸ் காமன்வெல்த் போர் கல்லறைத் தோட்டத்தை பிரதமர் மோடி பார்வையிடுகிறார். இது முதல் உலகப் போரின்போது எகிப்து மற்றும் பாலஸ்தீனத்தில் போரிட்டு உயிரிழந்த 4,000 இந்திய ராணுவ வீரர்களின் நினைவிடமாக உள்ளது. உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்த உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.