;
Athirady Tamil News

புதுமண தம்பதி உள்பட 5 பேர் வெட்டிக்கொலை- கொலையாளியும் தனக்கு தானே சுட்டு பலி!!

0

உத்தரபிரதேச மாநிலம் மெயூன்பூர் மாவட்டம் கோகுல்பூரா கிராமத்தை சேர்ந்தவர் சிவ்வீர் யாதவ். இவர் டெல்லி நொய்டாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரது தம்பி சோனு (வயது21)வுக்கும், சோனி (20) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக சிவ்வீர் யாதவ் சொந்த கிராமத்துக்கு வந்து இருந்தார். திருமணத்தில் ஏராளமான உறவினர்களும் பங்கேற்றனர். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டதுடன் இந்த திருமண விழா விமரிசையாக நடந்தது. சில உறவினர்கள் திருமண வீட்டில் தங்கி இருந்தனர்.

நேற்று இரவு அனைவரும் தூங்கிகொண்டு இருந்தனர். நள்ளிரவு 2 மணி அளவில் சிவ்வீர் யாதவ் எழுந்தார். பின்னர் வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து ஆவேசத்துடன் தூங்கி கொண்டிருந்தவர்களை வெட்டினார். மேலும் அவர்கள் தலையையும் துண்டித்தார். இந்த கொடூர கொலை வெறி தாக்குதலில் அவரது சகோதரர்கள் புல்லான் (25) புதுமணத் தம்பதியான சோனு-சோனி மற்றும் மைத்துனர் சவுரப்(23) நண்பர் தீபக் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தனர். இதனை தடுக்க முயன்ற அவரது மனைவி டோலி(24) அத்தை சுஷ்மா (35) ஆகியோருக்கும் கோடாரி வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்நிலையில் 5 பேரை கொன்ற சிவ்வீர் யாதவ் தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் இது பற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். இந்த கொடூர கொலையில் சிவ்வீர் யாதவ் ஈடுபட்டதற்கான காரணம் என்ன வென்று தெரியவில்லை. அவர் பயன்படுத்தியது அனுமதி இல்லாத துப்பாக்கி ஆகும். திருமண வீட்டில் புதுமணத்தம்பதி உள்பட 5 பேர் தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவம் கிராம மக்களிடையே பரவியது. இதையடுத்து அவர்கள் அங்கு திரண்டு வந்தனர். பிணமாக கிடந்தவர்கள் உடல்களை பார்த்து அவர்கள் கதறி அழுதார்கள். இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.