;
Athirady Tamil News

ரஷியாவில் கிளர்ச்சியை ஏற்படுத்த மேற்கத்திய நாடுகள் சதி- அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு!!

0

உக்ரைன் மீதான போரில் ரஷிய ராணுவத்துக்கு அந்நாட்டின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு உதவியது. ரஷியாவின் கூலிப்படை என்று அழைக்கப்படும் வாக்னர் குழு, உக்ரைன் படையினருக்கு எதிராக சண்டையிட்டு சில நகரங்களை கைப்பற்றியது. இதற்கிடையே ரஷிய ராணுவ தலைமைக்கும், அரசுக்கும் எதிராக வாக்னர் குழு திரும்பியது. தங்களது படை மீது ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் ரஷியாவில் கிளர்ச்சியை ஏற்படுத்த போவதாகவும் வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஷின் அறிவித்தார்.

இதையடுத்து அப்படையின் 25 ஆயிரம் வீரர்கள் தலைநகர் மாஸ்கோவை நோக்கி சென்றனர். இதையடுத்து வாக்னர் குழுவுக்குரிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் பெலாரஸ் நாட்டு அதிபரின் சமரசத்தை ஏற்றுக்கொண்ட வாக்னர் குழு தலைவர், கிளர்ச்சியை கைவிட்டதாக அறிவித்தார். இதனால் வாக்னர் படை வீரர்கள் பின்வாங்கி திரும்பி சென்றனர். இந்த நிலையில் ரஷிய அதிபர் புதின் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:- கிளர்ச்சியில் இருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. ரஷியாவில் உள்நாட்டு கிளர்ச்சி உருவானால் தோல்வியில்தான் முடியும். ரஷியர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு சாக வேண்டும் என்று உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன. கிளர்ச்சியை ஏற்படுத்த முயன்ற சிலர், உக்ரைன் அரசாங்கம் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கைகளில் விளையாடி இருக்கிறார்கள்.

துரோகிகளான அவர்கள் நீதி முன்பு கொண்டு வரப்படுவார்கள். வாக்னர் படையை வீழ்த்த உறுதுணையாக இருந்த ரஷிய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ரஷியரில் ரத்தம் சிந்துவதை தவிர்க்க முடிவு செய்த வாக்னர் போராளிகள் மற்றும் தளபதிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். நாட்டு மக்கள் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினர். ரஷியாவின் எதிரிகள் தவறாக கணக்கிட்டுள்ளனர். வாக்னர் படையை சேர்ந்த வீரர்கள் விரும்பினால் ரஷிய ராணுவத்தில் இணைந்து கொள்ளலாம் அல்லது பெலாரஸ் நாட்டுக்கு செல்லலாம்.

அவர்கள் பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவோ, பெலாரஸ் நாட்டுக்கு இடம் பெயரவோ அல்லது குடும்பத்துடன் திரும்ப செல்லவோ அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். புதின் தனது உரையில் வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஷினின் பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.