;
Athirady Tamil News

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது!! (PHOTOS)

0

கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று(28) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான கடற்றொழில் அமைச்சர் திரு.டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் திருமதி பி.எச்.எம்.சார்ள்ஸ் ஆகியோரின் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இன்றைய மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், மாவட்டத்தின் முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களை அமுல்ப்படுத்தும்போது எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக ஆராயப்பட்டு அதற்கான தீர்வுகளும் எட்டப்பட்டன.

இந்த கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களுக்கான அனுமதியினை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் சட்டவிரோத மணல் அகழ்வு, போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

அத்துடன் விவசாயம், நீர்வழங்கல், கல்வி, சுகாதாரம், உள்ளூராட்சி, கூட்டுறவு, வாழ்வாதாரம், மீன்பிடி, வீதி, காணி, கால்நடை அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், விளையாட்டு உட்பட அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்களும் ஆராயப்பட்டன.

இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன, வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்கள், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், வடமாகாண அமைச்சு சார்ந்த திணைக்களங்களின் பணிப்பாளர்கள், ஏனைய திணைக்களங்களின் பணிப்பாளர்கள், இராணுவ உயரதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், மாவட்ட திணைக்களங்கள் சார் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.