;
Athirady Tamil News

கொலை செய்யப்பட்ட 5 வயது சிறுமி: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது அம்பலம்- பீகார் வாலிபர் கைது!!

0

கேரள மாநிலத்தில் வெளிமாநிலத்தை சேர்ந்த பலரும் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர். எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா பகுதியில், பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதியர், தங்களது 3 மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் வசித்து வந்தனர். இவர்களது 2-வது மகளான 5 வயது சிறுமி அந்த பகுதியில் விளையாடிய போது திடீரென மாயமானாள். அவளை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்காததால் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அவர்கள் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது சிறுமியை, ஒரு வாலிபர் அழைத்து செல்வது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிறுமியை கடத்தியவர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இதில் சிறுமியை கடத்தியது அதே பகுதியில் வசிக்கும் வாலிபர் தான் என தெரியவந்தது. அவரும் பீகாரை சேர்ந்தவர் தான். தொழிலுக்காக கேரளா வந்த அவர், கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் சம்பவ இடத்திற்கு குடி வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவர் வசித்த வீட்டிற்கு சென்றனர். அப்போது அந்த வாலிபர் குடிபோதையில் இருந்துள்ளார். அதனால் அவரிடம் இருந்து உடனடியாக தகவல்கள் பெற முடியவில்லை. சில மணி நேரங்களுக்கு பிறகு விசாரணை நடத்தியதில் அவரது பெயர் அஸ்பாக் ஆலம் (வயது 23) என தெரியவந்தது.

அவரை போலீசார் கைது செய்தனர். அவர், சிறுமிக்கு ஜூஸ் வாங்கி கொடுத்து அழைத்துச்சென்றதாக தெரிவித்தார். இருப்பினும் எங்கு அழைத்துச்சென்றார் என்பதை தெரிவிக்காமல் மழுப்பலாக பதில் அளித்து வந்தார். இதனை தொடர்ந்து போலீசார் மீண்டும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது சிறுமியுடன் அந்த வாலிபர் திருச்சூர் செல்லும் பஸ்சில் ஏறுவது தெரியவந்தது. மேலும் சிறுமியை அந்த பகுதியில் உள்ள சந்தையின் பின் பகுதியில் குப்பை மேடாக கிடக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றதை பார்த்ததாக ஒருவர் போலீசாரிடம் தெரிவித்தார். அதன் அடிப்படையில் அந்த பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு சாக்குமூடை ஒன்றில் சிறுமியின் உடல் கட்டப்பட்டு வீசியிருப்பது தெரியவந்தது. அதனை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

களமசேரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும், கழுத்தை நெரிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்தது. சிறுமி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் குறித்து எர்ணாகுளம் ரூரல் போலீஸ் சூப்பிரண்டு விவேக்குமார் கூறுகையில், சிறுமி மாய மானதாக புகார் வந்ததும், சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்தோம். அப்போது தான் வாலிபர் ஒருவர் குழந்தையை அழைத்துச்செல்வது தெரியவந்தது. அதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் பீகாரை சேர்ந்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

பின்னர் சிறுமியின் உடலை சந்தையின் பின் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் இருந்து மீட்டோம். அந்த பகுதி சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ள இடமாகும். அங்கு மது மற்றும் போதைப் பொருள் கும்பல் அடிக்கடி வந்து செல்வது உண்டு. அங்கு சிறுமியை அழைத்துச் சென்றது ஏன் என்பது தொடர்பாக, கைதான வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.