;
Athirady Tamil News

டெல்டா விமானத்தில் குடிபோதையில் தாய், மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயணி!!

0

அமெரிக்காவில் டெல்டா விமானத்தில் பயணித்த ஒரு பயணி, குடிபோதையில் தன் அருகே அமர்ந்து பயணித்த பெண் மற்றும் அவரது 16 வயது மகளிடம் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நியூயார்க்கின் ஜேஎப்கே விமான நிலையத்தில் இருந்து கடந்த 26ம் தேதி கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகருக்கு சென்ற டெல்டா விமானத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. போதை தலைக்கேறிய நிலையில் தொடர்ந்து தாய் மற்றும் மகளை பாலியல் ரீதியாக சீண்டிக்கொண்டிருந்த அந்த பயணி கேட்கக் கேட்க விமான ஊழியர்கள் மது கொடுத்துள்ளனர். ஆனால் தாயும், மகளும் உதவி கேட்டபோது அவர்களிடம் பொறுமையாக இருக்கும்படி கூறிவிட்டு அலட்சியமாக இருந்துள்ளனர்.

இதனால் அந்த நபரின் தொல்லை எல்லைமீறி போயிருக்கிறது. பாலியல் சீண்டல்களை பொறுத்துக்கொள்ள முடியாமல் தங்களுக்கு இருக்கையை மாற்றிக்கொடுக்கும்படி கேட்டுள்ளனர். ஆனாலும் விமான ஊழியர்கள் கண்டுகொள்ளாமல் கடந்துசென்றுள்ளனர். இதைப் பார்த்த மற்றொரு ஆண் பயணி, பீதியடைந்து காணப்பட்ட அந்த சிறுமிக்கு தனது இருக்கையை கொடுத்துள்ளார். அவர் போதையில் இருந்த நபருக்கும், சிறுமியின் தாய்க்கும் இடையில் அமர்ந்து பயணித்துள்ளார்.

விமானம் தரையிறங்கியபோது, விமான ஊழியர்கள் அந்த பெண்ணுக்கும், மகளுக்கும் 5000 கிமீ இலவச பயணம் செய்வதற்கான சலுகையை வழங்குவதாக கூறி, மன்னிப்பும் கேட்டுள்ளது. ஆனால் தவறு செய்த பயணி மீதான நடவடிக்கை குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தாய், மகள் சார்பில் விமான நிறுவனத்துக்கு எதிராக மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்பட்டுள்ளது. பயணி தவறு செய்யும்போது விமான நிறுவனம் அலட்சியமாக இருந்ததற்காக, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 2 மில்லியன் டாலர் வழங்கவேண்டும் என அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.