;
Athirady Tamil News

மாநாட்டிற்கு வந்து சென்றபோது விபத்தில் சிக்கி மரணம் அடைந்த தொண்டர்கள்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்!!

0

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நேற்று மதுரையில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. அதிமுக சார்பில் நடைபெற்ற மாநாட்டில் தன்னெழுச்சியோடு கலந்து கொள்வதற்காக, கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் வருகை தரும்போதும், மாநாடு முடிந்து வீடு திரும்பும்போதும் எதிர்பாராத விதமாக, விழுப்புரம் மாவட்டம், வல்லம் வடக்கு ஒன்றிய இலக்கிய அணி இணைச் செயலாளரும், நெகனூர் வடகொல்லை கிளைக் கழகச் செயலாளருமான பொன்னுசாமி; திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி மேற்கு ஒன்றியம், மண்டல நாயனகுண்டா ஊராட்சி, பத்திரிகானூர் கிளைக் கழகச் செயலாளர் சென்னையன்; கோவை மாநகர் மாவட்டம், காந்திபுரம் பகுதி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் ஊ. கதிரேசன்; கோவை புறநகர் தெற்கு மாவட்டம், பெரியநெகமம் பேரூராட்சி, 13-ஆவது வார்டு கழக அவைத் தலைவர் பழனிச்சாமி; கோவை புறநகர் வடக்கு மாவட்டம், நரசிம்ம நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த மாரிமுத்து; தென்காசி வடக்கு மாவட்டம், குருவிகுளம் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் வாசுதேவன்;

விருதுநகர் கிழக்கு மாவட்டம், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியம், லட்சுமியாபுரம் கிளைக் கழகத்தைச் சேர்ந்த கடற்கரை; புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், அன்னவாசல் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளரும், ஊராட்சி ஒன்றியக் குழு 10-ஆவது வார்டு உறுப்பினரும், அன்னவாசல் நிலவள வங்கி தலைவருமான சாம்பசிவம்; ஆகியோர் மரணமடைந்து விட்டனர் என்ற செய்தி கேட்டும்; வாகனங்களில் செல்லும்போது எதிர்பாராத விதமாக நிகழ்ந்த சாலை விபத்தில் சிலர் காயமடைந்துள்ளனர் என்ற செய்தி கேட்டும், ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், சாலைகளில் பயணம் செய்யும்போது, மிகுந்த பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் தங்கள் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அவ்வப்போது நான் வலியுறுத்தி வரும் நிலையில், இதுபோன்ற விரும்பத்தகாத விபத்துகள் நடைபெற்று, கழக உடன்பிறப்புகள் உயிரிழப்பதும், காயங்கள் அடைவதும், மேலும் என்னை வேதனையில் ஆழ்த்துகிறது.

கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டிருந்த பொன்னுசாமி, சென்னையன், கதிரேசன், பழனிச்சாமி, மாரிமுத்து, வாசுதேவன், கடற்கரை மற்றும் சாம்பசிவம் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர்களது குடும்பத்திற்கு கழகத்தின் சார்பில் தலா 6 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல், வாகன விபத்துகளில் படுகாயமடைந்து, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு, மருத்துவ சிகிச்சைக்காக கழகத்தின் சார்பில் தலா 1,50,000/- ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000/- ரூபாயும் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் பூரண நலம்பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.