;
Athirady Tamil News

கேரளாவில் ஆற்றில் ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி!!

0

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் வெண்மணி பகுதியை சேர்ந்தவர் ஷைலேஷ்(வயது43). இவரது மனைவி ஆதிரா (31). இவர்களது மகள் கீர்த்தனா(11), மகன் காசிநாத்(3). நேற்று ஷேலேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஆட்டோவில் மாவேலிக் கரைக்கு சென்றார். ஆட்டோவை சபானோ சஜூ என்பவர் ஓட்டிச் சென்றார். மாவேலிக்கரை அருகே உள்ள கொல்லக்கடவு என்ற பகுதியில் சென்ற போது, அவர்கள் சென்ற ஆட்டோ திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, அச்சன்கோவில் ஆற்றுக்குள் கவிழ்ந்தது. ஆட்டோவுக்குள் இருந்த ஷைலேஷ், அவரது மனைவி, மகன், மகள் மற்றும் ஆட்டோவின் டிரைவர் ஆகிய 5பேரும் ஆற்றுக்குள் விழுந்தனர்.

இந்த பயங்கர விபத்தை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்தனர். அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஆதிரா படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தார். ஆற்றுக்குள் விழுந்துகிடந்த ஷைலேஷ், அவரது மகள் கீர்த்தனா, ஆட்டோ டிரைவர் சபானோ சஜூ ஆகிய 3 பேரையும் மீட்டனர். ஆட்டோ விழுந்த ஆற்றில் தண்ணீர் அதிகளவில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஷைலேஷின் மகன் காசிநாத் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டான்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் ஆதிராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். காயமடைந்த ஷைலேஷ் உள்ளிட்ட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் காசிநாத்தை போலீசாரும், மீட்பு படையினரும் தொடர்ந்து தேடி வருகின்றனர். ஆற்றுக்குள் ஆட்டோ கவிழ்ந்து பெண் பலியானது மட்டுமின்றி, அந்த பெண்ணின் மகன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.