;
Athirady Tamil News

உக்ரைன் மீதான போருக்கு மத்தியில் ரஷியா-வடகொரியா இடையே ஆயுத ஒப்பந்தம்: புதினை கிம்ஜாங் உன் சந்திக்கிறார்!!

0

ரஷியா-வடகொரியா நாடுகள் இடையே ஆயுத ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இம்மாதம் ரஷியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், ரஷிய அதிபர் புதினை சந்தித்து உக்ரைன் போருக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க உள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பான செய்தியை அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் ஊடகம் வெளியிட்டுள்ளது. ஜிம்ஜாங் உன், ரஷியாவுக்கு ஆயுதம் தாங்கிய வீரர்கள் பாதுகாப்புடன் ரெயிலில் பயணம் மேற் கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாட்டு தலைவர்கள் எந்த இடத்தில் சந்தித்து பேசுவார்கள் என்று தெளிவான விவரம் கிடைக்கவில்லை. ஆனால் பசிபிக் துறைமுக நகரமான விளாடிவோ ஸ்டாக்கில் இந்த சந்திப்பு நடைபெறலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் கூறும்போது, கடந்த மாதம் ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி செர்ஜி ஷோய்கு வடகொரியாவுக்கு பயணம் செய்தார்.

அப்போது ரஷியாவுக்கு பீரங்கி வெடி மருந்துகளை விற்க வட கொரியாவை வலியுறுத்தினார். இந்த ஆயுத ஒப்பந்த பேச்சுவார்த்தையை தலைவர்கள் அளவில் தொடர கிம்ஜாங் உன் எதிர்பார்க்கிறார் என்று எங்களுக்கு தகவல் கிடைத்தது. ரஷியாவுடன் ஆயுத பேச்சுவார்த்தைகளை நடத்தமாட்டோம். ரஷியாவுக்கு ஆயுதங்களை வழங்கவோ அல்லது விற்கவோ கூடாது என்று வடகொரியா அளித்த பொது உறுதிமொழிகளும், கட்டுபட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்துகிறது என்றார்.

ரஷியா பாதுகாப்பு மந்திரி, வடகொரியாவுக்கு சென்றபோது புதினும், கிம்ஜாங் உன்னும் அவர்களது கடிதங்களை மாற்றி கொண்டதாக வெள்ளை மாளிகை கடந்த வாரம் தெரிவித்து இருந்தது. அதேபோல் ரஷியா-வடகொரியா இடையே ஆயுத பேச்சுவார்த்தைகள் தீவிரமாக முன்னேறி வருவதாக வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு அதிகாரி ஜான் செர்பி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அந்நாட்டுடன் வடகொரியா ஆயுத ஒப்பந்தம் மேற்கொள்ள இருப்பதாக வெளியுறவு தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.