;
Athirady Tamil News

காவிரி நதிநீர் ஒழுங்காற்று கமிட்டியிடம் தமிழக அரசு 12-ந்தேதி புகார் அளிக்க முடிவு!!

0

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவின்படி செப்டம்பர் 12-ந்தேதி வரை 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது. இந்த தண்ணீர் போதாது என்று தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இதேபோல் கர்நாடக அரசு முறையிட்டு உள்ளது. இந்நிலையில் தமிழ் நாட்டுக்கு கர்நாடக அரசு திறந்துவிடும் தண்ணீரை நாளுக்கு நாள் குறைத்து வந்தது. கடந்த 3 நாட்களில் தண்ணீர் திறப்பதை 3 ஆயிரம் கனஅடியாக கர்நாடக அரசு குறைத்துவிட்டது. இது தமிழக அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி கர்நாடக அரசு நடந்து கொள்வதால் வருகிற 12-ந் தேதி காவிரி நதிநீர் ஒழுங் காற்று குழுவில் தமிழக அரசு புகார் அளிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவிரி கடைமடை பகுதிகளுக்கு போதிய தண்ணீர் வராததால் குறுவை சாகுபடி பயிர்கள் அனைத்தும் காய்ந்து கிடக்கின்றன.

இந்த சூழலில் கர்நாடக அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை முழுமையாக திறந்துவிடாமல் தினமும் குறைத்துக் கொண்டே வருகிறது. சனிக்கிழமை காலை கே.ஆர்.எஸ். மற்றும் கபினி நீர்த்தேக்கங்களில் இருந்து தமிழகத்துக்கு 2787 கனஅடி வீதம் தண்ணீர்தான் கர்நாடக அரசு திறந்துவிட்டது. சுப்ரீம் கோர்ட்டில் காவிரி நீர் பிரச்சினை தொடர்பான வழக்கு விசாரணை 21-ந்தேதிக்கு தான் வருகிறது. இந்நிலையில் திறந்து விடப்படும் தண்ணீரை மேலும் கர்நாடக அரசு குறைத்து வருவதால் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கம் வருகிற 20-ந்தேதி டெல்டா மாவட்டங்களில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. தமிழக அரசு காவிரி ஒழுங்காற்று குழுவில் முறையிட இருப்பதால் அதற்கு பதிலளிக்கும் வகையில் கர்நாடக அரசும் விரிவான விளக்கத்தை தயாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.