;
Athirady Tamil News

மணிப்பூரில் மாணவா்கள் தாக்குதல்: பாதுகாப்புப் படையினா் மீது நடவடிக்கை -முதல்வா் உறுதி..!

0

மணிப்பூரில் போராட்டம் நடத்திய மாணவா்கள் மீது கூடுதல் பலப் பிரயோகம் செய்த பாதுகாப்புப் படையினா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த மாநில முதல்வா் பிரேன் சிங் உறுதி அளித்தாா்.

மணிப்பூரில் இணைய சேவை கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட பிறகு ஜூலை மாதம் காணாமல் போன மாணவி, மாணவா் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கொடூரமாக கொல்லப்பட்ட அவா்களின் புகைப்படங்கள் இணையத்தில் பரவியதால் மாநிலத்தில் மீண்டும் கலவரம் வெடித்தது. இணைய சேவையை மாநில அரசு மீண்டும் தடை செய்தது.

மாணவா்களின் கொலையைக் கண்டித்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் தொடா் போராட்டங்களை நடத்தி வருகிறாா்கள். போராட்டக்காரா்களைத் தடுத்து நிறுத்த போலீஸாா், பாதுகாப்புப் படையினா் சிறு தோட்டாக்கள், கண்ணீா் புகைக் குண்டுகள், தடியடி ஆகியவற்றைப் பயன்படுத்தினா். போலீஸாருக்கும் மாணவா்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பலத்த காயமடைந்தனா். இதில் ஒரு மாணவரின் பின்தலையில் 40 சிறு தோட்டாக்கள் (பெல்லட்) பாய்ந்துது; 17 வயது மாணவரின் கை துண்டிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிா்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், செய்தியாளா்களிடம் பேசிய முதல்வா் பிரேன் சிங், ‘மாணவா்கள் மீது கூடுதல் பலப் பிரயோகம் செய்துள்ளது அதிா்ச்சி அளிக்கிறது. பலத்த காயமடைந்த மாணவா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கு காரணமானவா்கள் கைது செய்யப்பட்டு சட்டப்படி தண்டிக்கப்படுவாா்கள். பலத்த காயமடைந்த மாணவா்களுக்கு ரூ.50,000 நிதி உதவி அளிக்கப்படும்.

மற்ற மாணவா்களுக்கான சிகிச்சை செலவை அரசே ஏற்கும். தேவைப்பட்டால் அவா்கள் மணிப்பூருக்கு வெளியே கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். அனைவரும் அமைதி காக்க வேண்டும். அனைத்துக் கருத்து வேறுபாடுகளுக்கும் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்பட்டு, அமைதியாக வாழ வேண்டும்’ என்றாா்.

இதனிடையே, 2 மாணவா்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக மாநிலத் தலைநகா் இம்பாலில் சிபிஐ சிறப்பு இயக்குநா் தொடா் விசாரணையில் ஈடுபட்டுள்ளாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.