சட்டத்தரணிகளுக்கு கடமைகளின் போது அச்சுறுத்தல் – சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்
இலங்கையில் உள்ள சட்டத்தரணிகள் தங்கள் கடமைகளை நிறைவேற்றும் போது, அவர்களது சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
உயிருக்கு அஞ்சாமல் தொழில்சார் கடமைகளை நிறைவேற்றும் சுதந்திரம் சட்டத்தரணிகளுக்கு இருக்க வேண்டும் என அந்த சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தெரிவித்துள்ளார்.
கலகெதர நீதவான் நீதிமன்றில் கடந்த 17 ஆம் திகதி சந்தேகநபர் ஒருவரால் பெண் சட்டத்தரணி ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை
கலகெதர நீதவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்ட குறித்த வழக்கு விசாரணையின் போது, பல சட்டத்தரணிகள் முன்னிலையாகி தாக்குதலுக்குள்ளான பெண் சட்டத்தரணிக்கு நீதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்தியதாக கௌசல்ய நவரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், சட்டத்தரணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது இன்றியமையாதது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நீதிமன்றத்தின் கண்ணியம் மற்றும் அதிகாரம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.