;
Athirady Tamil News

கல்முனையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

0

வர்த்தக கட்டட தொகுதி அறை ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் கல்முனை தலைமையக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட சேனைக்குடியிருப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக கட்டடத்தின் தங்கும் அறையில் நேற்று (2023.11.16) காலை தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீரின் வழிகாட்டலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பல்வேறு குற்றத் தடுப்பு பிரிவு பதில் பொறுப்பதிகாரி எஸ்.ஜனகீதன் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.ஏ.ஆகாஸ் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீனின் உத்தரவின் பிரகாரம் மீட்கப்பட்ட சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் 22 வயது மதிக்கத்தக்க கோகுலராஜ் சுமன்ராஜ் என்பவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைக்காக அம்பாறையில் இருந்து தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.