;
Athirady Tamil News

இந்தியாவின் உடன் உத்தரவுக்கு அடிபணிந்தது இலங்கை அரசாங்கம்: வலுக்கும் எதிர்ப்புகள்

0

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்று கைதான 22 இந்திய கடற்தொழிலாளர்களும் இந்திய அரசாங்கத்தின் உயர் மட்ட அழுத்தத்தினால் இலங்கை அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டனர்.

பருத்தித்துறைக் கடற்பரப்பில் நேற்று மதியம் 22 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு மாலை 5 மணிக்கு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்டுள்ள இந்திய கடற்தொழிலாளர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுத்தனர்.

உயர்மட்டத்தில் இருந்து வந்த உத்தரவு
அதனையடுத்து, இன்று இந்திய மீனவர்களை கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தவிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட 22 இந்திய கடற்தொழிலாளர்களையும் விடுதலை செய்யுமாறு இலங்கை கடற்படைக்கு இலங்கை அரசாங்க உயர்மட்டத்தில் இருந்து உத்தரவு பறந்தது.

இந்நிலையில் 22 இந்திய கடற்தொழிலாளர்களும் அவர்களது இரண்டு படகில் இன்று அதிகாலை தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குறித்த சம்பவம் வடபகுதி கடற்தொழிலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எமது வளத்தை அழித்து கொள்ளையிட்ட இந்திய கடற்தொழிலாளர்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்யாது இந்திய அரசாங்கத்தின் உத்தரவுக்கு பணிந்து இலங்கை அரசாங்கம் இந்திய மீனவர்களையும் படகுகளையும் விடுவித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.

கடற்றொழில் அமைச்சர்
அதிபரின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு கடற்றொழில் அமைச்சரும் கண்ணைமூடி ஒத்துழைப்பு வழங்குகின்றாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கடற்றொழில் அமைச்சர் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார் – வடபகுதி கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் கேள்வி எழுப்பினர்.

நேற்று தமிழகத்தின் இராமேஸ்வரத்திற்கு இரு நாள் பயணமாக இந்தியாவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்ற நிலையில் இந்திய கடற்தொழிலாளர் பிரதிநிதிகள் நிதி அமைச்சரை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது கைதான தமது உறவுகளை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததோடு தமது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியதாக இந்திய தகவல்கள் தெரிவித்தன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.