;
Athirady Tamil News

‘சேரி’ என்றால் இது தான் அர்த்தம்., புது விளக்கம் அளித்த குஷ்பு

0

சேரி மொழியில் பேச முடியாது என நடிகை குஷ்பு பதிவிட்டுள்ள ட்வீட்டுக்கு பல எதிர்ப்புகள் வரும் நிலையில், அவர் தற்போது புது விளக்கம் அளித்துள்ளார்.

சேரி விவகாரம்
நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய கருத்துக்கு, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தெரிவித்ததன்படி, சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரத்திற்கு ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தன்னை திமுக ஆதரவாளராக காட்டிக் கொள்ளும் நெட்டிசன் ஒருவர், “மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி அடிக்கப்பட்டபோது தூங்கி கொண்டிருந்த குஷ்பு, தற்போது மகளிர் ஆணையம் த்ரிஷாவுக்காக எழுந்து வந்திருக்கிறது. இதை வச்சாவது தாமரைக்கு இரண்டு ஓட்டு வருமா என்ற நட்பாசையில் செய்கிறது” என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த குஷ்பு, “திமுக குண்டர்கள் இப்படித்தான் முட்டாள்தனமான மொழியில் பேசுவார்கள். ஒரு பெண்ணை அவமதிக்கவோ, மன்னிக்கவோ உங்களை போல சேரி மொழியில் பேச முடியாது” என்றார்.

புது விளக்கம்
நடிகை குஷ்புவின் இந்த கருத்துக்கு காயத்ரி ரகுராம் மற்றும் இயக்குநர் பா,ரஞ்சித் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், நடிகை குஷ்பு சேரி மொழி குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், “பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக நான் எப்போதும் நிற்பேன். பிரெஞ்சு மொழியில் சேரி என்ற சொல்லுக்கு அன்பு என்று அர்த்தம். அதை அர்த்தத்திலேயே சேரி என்ற சொல்லைப் பயன்படுத்தினேன்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.