;
Athirady Tamil News

இலங்கையில் சகோதரிகள் இணைந்து செய்த அதிர்ச்சிகரமான செயல்

0

தொலைகாட்சி நிகழ்ச்சி பாடகர் ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து 50 இலட்சம் ரூபாவை திருடிய சம்பவம் தொடர்பான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவர் நேற்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடவத்தை பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் மற்றும் அவர்களது தாயாரின் முறைகேடான கணவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிரதான சந்தேகநபர்
சந்தேகநபர்கள் இருவரும் 22 மற்றும் 19 வயதுடையவர்கள் என்பதுடன், பிரதான சந்தேகநபர் அவர்களை குற்றச்செயல்களில் ஈடுபடுத்தியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

தனியார் தொலைபேசி நிறுவனம் ஒன்றின் மூலம் பெறப்பட்ட போலி ஆவணங்களை பயன்படுத்தி இணையத்தின் ஊடாக குறித்த பாடகரின் வங்கிக் கணக்கிற்குள் நுழைந்து இந்த பண மோசடியை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று 11 நோயாளர்களிடம் 03 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தையும் இந்த சந்தேக நபர்கள் மோசடி செய்துள்ளதாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் நேற்று தெரியவந்துள்ளது.

வங்கிக் கணக்குகள்
குறித்த பாடகரின் வங்கிக் கணக்கிலிருந்து திருடப்பட்ட பணம் பல்வேறு வங்கிக் கணக்குகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ரூபாவைச் செலவழித்து ஆப்பிள் கையடக்கத் தொலைபேசிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தகவல் சமர்ப்பித்துள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் அத்துமீறல்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 25க்கும் மேற்பட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் என செய்தி வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.