;
Athirady Tamil News

உயிரிழந்த பெண்ணின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற கொலையாளி: வெளியான அதிர்ச்சி தகவல்!

0

இரத்தினபுரி மாவட்டம் – கஹவத்தையில் 71 வயதான பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அவரது மகளுக்கும் இந்தக் கொலைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென தெரியவந்துள்ளது.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மற்றுமொருவரை பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றில் கஹவத்தை பொலிஸார் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இறந்தவரின் மகளுக்கு இதில் தொடர்பில்லை என்பதால் அவரை விடுவிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இந்நிலையில், அவரை விடுவித்த பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றம், மற்றைய சந்தேக நபரை அடுத்த மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

பொலிஸார் நடாத்திய விசாரணைகளின் போது அயலவர்கள் வழங்கிய வாக்குமூலங்கள், கொட்டகெதனவில் இடம்பெற்ற பெண் கொலைகள் போர்வையில் சமூகத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை கருத்திற்கொண்டும் மற்றும் மற்றும் பெண்ணின் பாதுகாப்பை கருத்திற் கொண்டும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகள் கைது செய்யப்பட்டதாக நீதவான் முன்னிலையில் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை தொடர்பில் 55 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேசன் தொழிலாளியான இவர், கடந்த ஜூன் மாதம் உயிரிழந்த பெண்ணின் வீட்டை திருத்துவதற்காக வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்போது, ​​வீட்டில் இருந்த தங்கப் பொருள்கள் களவாடப்பட்டது தொடர்பில் சந்தேகநபரிடம் பெண் கேட்டதற்கு, பின்னர் தங்கப் பொருட்களைத் திருடிய குற்றத்தை ஒப்புக்கொண்டு, அதற்கான மதிப்பை பணமாக தருவதாக உறுதியளித்துள்ளார்.

எவ்வாறாயினும், உறுதியளித்தபடி பணம் வழங்கப்படாமையால் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கவுள்ளதாக உயிரிழந்த பெண் சந்தேகநபருக்கு தொலைபேசியில் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்னர் கடந்த 13ஆம் திகதி சந்தேக நபர் குறித்த பெண்ணின் வீட்டிற்கு வந்ததையடுத்து, இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக கஹவத்தை பொலிஸார் நீதவானிடம் தெரிவித்தனர்.

கொலைக்கு பயன்படுத்திய கத்தி, அப்பகுதியில் உள்ள முட்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உயிரிழந்த பெண்ணின் இறுதிச் சடங்கிலும் சந்தேகநபர் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.