;
Athirady Tamil News

34 வருடங்களின் பின் யாழில் வழிபாடு செய்யும் மக்கள்!

0

யாழ்ப்பாணம் – வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள ஆலயங்களில் சுமார் 34 வருடங்களின் பின்னர் பொதுமக்கள் இன்றைய தினம் நேரடி வழிபாடுகளில் ஈடுபடவுள்ளனர்.

இதற்கமைவாக 290 பக்தர்கள் தமது பெயர் விபரங்களை தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு சமர்ப்பித்துள்ளனர்.

இராணுவத்தினரின் பேருந்தில் செல்லும் மக்கள்
வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 21 ஆலயங்களில் , பலாலி வடக்கு ஜே/ 254 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள இராஜேஸ்வரி அம்மன் கோவில், நாகதம்பிரான் அம்மன் கோவில் ஜே/238 கிராம அலுவலர் பிரிவில் உள்ள முத்துமாரி அம்மன் கோவில், ஜே/245 வசாவிளான் மேற்கு.கிராம அலுவலர் பிரிவில் உள்ள மனாம்பிராய் பிள்ளையார் கோவில், சிவன் கோவில் , நாகதம்பிரான் கோவில், சக்தியுடையாள் அம்மன் கோவில் ஆகிய ஏழு ஆலயங்களை தரிசிப்பதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றிருந்த நிலையில் 5 ஆலயங்களை தரிசிக்க 290 பேர் தமது பெயர் விபரங்களை சமர்பித்துள்ளனர்.

இந்த நிலையில் இரு ஆலயங்களிடம் இருந்து பெயர் விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை . இன்று காலை 9 மணிமுதல் பலாலி இராணுவ தலைமையகத்தின் பிரதான நுழைவாயில் ஊடாக ஆலயத்தினை தரிசிப்பதற்கு வருகை தரும் பக்தர்கள் இராணுவத்தினரின் பேரூந்து மூலம் அழைத்துச்செல்லப்படவுள்ளனர்.

இதேவேளை இலத்திரனியல் உபகரணங்கள், தொலைபேசிகள் என்பன இராணுவத்தினரால் பெறப்பட்டு , வழிபாடுகளின் பின்னர் மீள வெளியே வருகின்ற பொழுது குறித்த உபகரணங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பூசைப் பொருட்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த மாதம் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தலைமையிலான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் காணி விடுவிப்பு தொடர்பாக பேசப்பட்டிருந்தது.

வழிபாட்டு தலங்களை புனர்நிர்மாணம் அல்லது புனரமைப்பு பணிகள் செய்வதற்கு அனுமதிகள் வழங்கப்படவில்லை என இராணுவம் குறிப்பிட்டுள்ளபோதிலும் , ஆலயத்தினர் விரும்பினால் முறையான கோரிக்கையினை மாவட்ட செயலகத்திடம் முன் வைப்பதன் மூலம் இராணவத்தினர் மூலம் ஆலயங்களை புனர்நிர்மாணம் செய்யமுடியும் என யாழ்.மாவட்ட செயலர் அம்பலவானர் சிவபாலசுந்தரன் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.