;
Athirady Tamil News

காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் வடக்கு ஆளுநர் கோரிக்கை

0

வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் வடக்கு ஆளுநர் கோரிக்கை.

வடக்கு மாகாணத்தில் வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை மீள விடுவிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள், அமைச்சர் பவித்ராதேவி வன்னிஆராச்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள அரச மரக்கூட்டுதாபனத்தில் அமைச்சரை நேரடியாக சந்தித்து ஆளுனரால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட காணிகள் வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த காணிகளுக்குள் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடியாதுள்ளதாக ஆளுநர், துறைசார் அமைச்சரிடம் எடுத்துரைத்தார். இதனால் குறித்த வர்த்தமானியை மீளப்பெற்று, மக்களுக்கான பயன்பாட்டு காணிகளை விடுவிக்குமாறும் ஆளுநர் கோரிக்கை விடுத்தார்.

வடக்கு மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளின் விபரம் அடங்கிய அறிக்கையும் அமைச்சர் பவித்ராதேவி வன்னிஆராச்சியிடம், ஆளுநர் இதன்போது சமர்ப்பித்தார்.

வடக்கு மாகாண ஆளுனரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மற்றும் கலந்தாலோசிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் பவித்ராதேவி வன்னிஆராச்சி, ஆளுநரிடம் உறுதியளித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.