;
Athirady Tamil News

ஈரான் மீண்டும் அதிரடி; வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல்

0

தெஹ்ரான்

ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில், வர்த்தக கப்பல்கள் மீது ஈரான் மீண்டும் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி திடீரென்று வான்வழியாக தாக்குதலை நடத்தின. இதன் தொடர்ச்சியாக ஈரானை ஒட்டிய முக்கிய கடல்வழியான ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் கைப்பற்றி மூடியது. இதனால், உலக அளவில் சரக்கு கப்பல்களின் போக்குவரத்து தடைப்பட்டது. உலக அளவில் 5-ல் ஒரு பங்கு எரிபொருள் கப்பல்கள் பயணிக்க கூடிய இந்த பகுதியை ஈரான் முடக்கியது.

இதனால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, பல்வேறு நாடுகளிலும் விலைவாசி உயர்வு உள்பட பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியது. இந்த சூழலில், அமெரிக்காவுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் முழுமையான அளவில் ஏற்படுத்தப்படாமல் இருந்தது.

வர்த்தக கப்பல்கள்
இந்த சூழலில், ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் வர்த்தக கப்பல்கள் மீது திடீரென்று ஈரான் தாக்குதல் நடத்தியது பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இதுபற்றி ஈரானின் ஐ.ஆர்.ஐ.பி. என்ற அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு முன்பிருந்த சூழல் இன்னும் திரும்பவில்லை.

இந்த ஜலசந்தி வழியே செல்லக்கூடிய அனைத்து கப்பல்களும், ஈரான் அறிவித்த கடல் வழியிலேயே பயணிக்க வேண்டும். அப்படி இல்லையெனில், அந்த கப்பல்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படாது என்று தெரிவித்து உள்ளது.

ஏவுகணை தாக்குதல்
இந்த தாக்குதல் பற்றி இங்கிலாந்து கடல்சார் வர்த்தக செயல்பாடுகளுக்கான அமைப்பு வெளியிட்ட செய்தியில், ஓமன் அருகே பயணித்த சரக்கு கப்பல் ஒன்றிடம் இருந்து, எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதில், ஹார்மூஸ் ஜலசந்தி கடலோர பகுதியில் அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்று கப்பலை தாக்கியது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி அமெரிக்க அதிகாரிகள் 2 பேர் கூறும்போது, ஹார்மூஸ் ஜலசந்தி வழியே சென்ற வர்த்தக கப்பல்கள் மீது 2 ஏவுகணைகளை ஈரான் ராணுவம் வீசி தாக்கியது. அவற்றில் ஒரு கப்பல் தாக்கப்பட்டு, ஓமன் கடற்கரை பகுதியில் நிற்கிறது. மற்றொரு வர்த்தக கப்பலையும் ஈரான் ஏவுகணை தாக்கியது என தெரிவித்தனர்.

காலாவதியான ஒப்பந்தம்
இதன்படி, 2 கப்பல்கள் கடுமையாக தாக்கப்பட்டன. எனினும், யாருக்கும் காயம் ஏற்பட்ட தகவல் வெளியாகவில்லை. ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் தாக்குதல்களை நிறுத்துவதற்காக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒரு வார கால ஒப்பந்தம் காலாவதியான நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.