எமது திறனை – ஆற்றலை வளர்த்துக்கொள்ள இன்னொரு மொழியைக் கற்பது அவசியமானது – ஆளுநர் நா.வேதநாயகன்
இன்னொரு மொழியைக் கற்பதால் நாம் குறைந்துவிடப்போவதில்லை. மாறாக நாம் வளர்வோம். எமது திறனை – ஆற்றலை வளர்த்துக்கொள்ள இன்னொரு மொழியைக் கற்பது அவசியமானது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார்.
சூரிய நிறுவகத்தின் ஏற்பாட்டில் இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சுதுமலை குபேரமஹாலில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (15.12.2024) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் சூரிய நிறுவகத்தின் ஸ்தாபகரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரியவும் கலந்துகொண்டார்.
அத்துடன் சுவிஸர்லாந்து தூதரகத்தின் பிரதித் தூதுவர் ஒலிவர் கௌரவ விருந்தினராகப் பங்கேற்றிருந்தார். மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கிய பின்னர் பிரதம விருந்தினர் உரையாற்றிய ஆளுநர்,
கிளிநொச்சி மாவட்டச் செயராக தான் பணியாற்றிய காலத்தில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சராக இருந்தவர் கரு ஜயசூரிய என்றும் அவர் சிறப்பான தலைமைத்துவத்தை வழங்கிய ஒருவர் எனவும் குறிப்பிட்டார். கரு ஜயசூரியவைப்போன்று தன்னால் நினைவுகூரப்படும் மற்றொருவராக மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இருக்கின்றார் என்றும், யாழ். மாவட்டச் செயலராக பணியாற்றியபோது நிதி அமைச்சராக இருந்த அவர் பல்வேறு வகைகளிலும் உதவியதாகவும் குறிப்பிட்டார்.
இன ஐக்கியத்துக்காகவும் தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும் சிங்கள மக்கள் தமிழ் மொழியையும், தமிழ் மக்கள் சிங்கள மொழியையும் கற்கும் வகையில் இலவசமாக வகுப்புக்களை நடத்திவரும் சூரிய நிறுவகத்தையும் அதன் நிறுவுனர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவையும் ஆளுநர் பாராட்டினார்.
சிங்கள மொழியை இரண்டாம் மொழியாக கற்பது இந்த நாட்டில் எங்கும் சென்று சேவையாற்றக் கூடிய வாய்பை உருவாக்கும் எனவும் ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார். கூடுதலான மொழியறிவு எங்களை மேம்படுத்த உதவும் எனவும் குறிப்பிட்ட ஆளுநர், இதன் ஊடகாக ஆய்வுக்கான திறன் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகளை வளர்க்க அது உதவும் என்றும் கூறினார்.
இந்த நிகழ்வில் மாணவர்களால் பல்வேறு கலை நிகழ்வுகள் சிங்கள மொழியிலும் நடத்தப்பட்டன.




