மகா கும்பமேளாவில் துறவறம் மேற்கொண்ட 7 ஆயிரம் பெண்கள்!

உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சன்யாத தீட்சை பெற்றுள்ளனர்.
பிரயாக்ராஜில் ஜன. 13 முதல் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. உலகின் மிகப்பெரிய ஆன்மிக திருவிழாவான கும்பமேளா பிப். 26 வரை நடைபெற உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் ஒருங்கே சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் இதுவரை 40 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி வழிபட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அமித் ஷா, ராஜ்நாத் சிங், எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்பட பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் சங்கமத்தில் புனித நீராடினர்.
இந்த நிலையில், கும்பமேளா நிகழ்வின்போது ஏராளமான இளம் பெண்கள் துறவறம் மேற்கொண்டு சன்யாச தீட்சைப் பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக அந்த மாநில அரசு வெளியிட்ட தகவலில்,
கும்பமேளா நிகழ்வில் இதுவரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் புனித நீராடி சன்யாச தீட்சை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூனா அகாராவின் ஆச்சார்யா மஹாமண்டலேஸ்வர் சுவாமி அவதேஷானந்த் கிரி, ஸ்ரீ பஞ்சதஷ்னம் ஆவாஹன் அகாராவின் ஆச்சார்யா மஹாமண்டலேஷ்வர் ஸ்வாமி அருண் கிரி மற்றும் வைஷ்ணவ துறவிகளின் தர்மாச்சாரியார்களின் தலைமையில் சநாதனத்தைப் பாதுகாக்க உறுதிமொழி எடுத்தனர்.
7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் குரு தீட்சை பெற்றுக்கொண்டனர். துறவரம் பூண்ட பெரும்பாலானோர் உயர்கல்வி பயின்ற இளம் பெண்களே ஆவார்.