பாகிஸ்தான்: பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கை! 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் 4 பயங்கரவாதிகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் நேற்று (மே.2) அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தெசில் பார்மல் பகுதியிலுள்ள குலோடாய் எனும் இடத்தில் பயங்கரவாதிகள் தஞ்சம் புகுந்துள்ளதாகக் கருதப்பட்ட வீட்டை பாகிஸ்தான் வீரர்கள் சுற்றி வளைத்துள்ளனர். அப்போது, இருதரப்புக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், இந்தத் தாக்குதலில் 2 பாதுகாப்புப் படை வீரர்களும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பாகிஸ்தானின் பலூசிஸ்தான், கைபர் பக்துன்குவா ஆகிய மாகாணங்களில் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் அதிகரித்து காணப்படும் நிலையில் அவர்களைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தொடர்ந்து போராடி வருவது குறிப்பிடத்தக்கது.