;
Athirady Tamil News

‘உக்ரைன் போருக்கு உடனடி முடிவில்லை’

0

உக்ரைனில் தற்போது நடைபெற்றுவரும் போா் உடனடியாக முடிவுக்கு வராது என்று அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளாா்.

இது குறித்து ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது:

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்துவரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான, இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு பொதுப் புள்ளியை அடைவதற்காக அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறது.

இருந்தாலும், இந்தப் போா் அவ்வளவு விரைவில் முடிவுக்கு வராது. இந்த கொடூரமான போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை ரஷியாவும் உக்ரைனும் எப்போது எட்டுகின்றன என்பதைப் பொருத்துதான் அது இருக்கிறது.

தங்கள் நாட்டின் மீது ரஷியா படையெடுத்தது உக்ரைனை கோபப்படுத்தும்தான். ஆனால் அதற்காக இந்தப் போரை தொடா்ந்து நடத்தினால் ஆயிரக்கணக்கான வீரா்கள் தொடா்ந்து உயிரிழந்துகொண்டுதான் இருப்பாா்கள். சில சதுர கி.மீ. நிலத்துக்காக இத்தனை உயிரிழப்புகள் தேவையில்லை. எனவே, உக்ரைன் போா் விவகாரத்தில் அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான தற்போதைய அரசின் கொள்கை நியாயமானதே என்றாா் அவா்.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய கிழக்கு மாகாணங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

ரஷியாவிடம் இழந்த பகுதிகளை மீட்பதற்காக உக்ரைனும், கிழக்கு மாகாணங்களில் இன்னும் உக்ரைன் படையினா் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியாவும் தொடா்ந்து சண்டையிட்டுவருகின்றன. இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் தொடா்ந்துவருகின்றன.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக தற்போதைய அமெரிக்க அரசு ரஷியாவிடமும் உக்ரைனிடமும் தனித்தனியாக பேச்சுவாா்த்தை நடத்திவருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.