;
Athirady Tamil News

ராணுவத்துக்கு வலுசேர்க்கும் பாக்.! நெடுந்தூர இலக்கை அழிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை!

0

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத்துக்கு வலுசேர்க்கும் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, நெடுந்தூரத்தைக் கடந்து அங்குள்ள இலக்குகளைத் துல்லியமாக அழிக்கவல்ல பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது பாகிஸ்தான்.

ஜம்மு-காஷ்மீரிலுள்ள பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின், பாகிஸ்தான் ராணுவம் ‘சிந்து போர் பயிற்சி’ என்ற பெயரில் போர் ஒத்திகையிலும் பல்வேறு ஆயுத சோதனைகளிலும் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், பாகிஸ்தான் ராணுவத்தின் அப்தாலி ஆயுத அமைப்பைச் சேர்ந்த பாலிஸ்டிக் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை சுமார் 450 கி.மீ. வரையிலான நெடுந்தூர இலக்கை துல்லியயமாக தாக்கி அழிக்கும் திறன் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், பாகிஸ்தான் ராணுவம் தயார் நிலையில் இருப்பதை இந்த ஆயுத சோதனை வெளிக்காட்டுகிறது. இந்த சோதனையின்போது, அந்நாட்டின் ராணுவ உயரதிகாரிகள் மட்டுமில்லாது ஏவுகணை வடிவமைப்பு துறையைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்கள், பொறியாளர்கள் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளதற்கு பாகிஸ்தான் அதிபர், பிரதமர் மற்றும் ராணுவ அதிகாரிகள் மேற்கண்ட குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும், தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் எந்தவிதமான அச்சுறுத்தல்களிலிருந்தும் தங்கள் நாட்டை பாதுகாக்க பாதுகாப்புப் படைகள் தயார் நிலையில் இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.