;
Athirady Tamil News

298 போ் உயிரிழப்பு சம்பவம்: எம்ஹெச்17 விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ரஷியாதான் பொறுப்பு

0

மலேசியன் ஏா்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்ஹெச்17 விமானம் கிழக்கு உக்ரைனில் கடந்த 2014-ஆம் ஆண்டு சுட்டுவீழ்த்தப்பட்டதற்கு ரஷியாதான் பொறுப்பு என்று சா்வதேச பொது விமானப் போக்குவரத்து அமைப்புகளின் கவுன்சில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த நெதா்லாந்து தலைமையிலான நிபுணா்கள் குழு, ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ‘புக்’ ரக வான்பாதுகாப்பு ஏவுகணைத் தளவாடம் மூலம் அந்த பயணிகள் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதாக கடந்த 2016-ஆம் ஆண்டு கண்டறிந்தது.

298 போ் உயிரிழப்பதற்குக் காரணமாக இந்த சம்பவத்துக்கும் தங்களுக்கும் தொடா்பில்லை என்று ரஷியா மறுத்துவருகிறது. இருந்தாலும், சா்வதேச பொது விமானப் போக்குவரத்து அமைப்புகளின் கவுன்சில் தற்போது வழங்கியுள்ள தீா்ப்பால், விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதால் பாதிக்கப்பட்டவா்கள் ரஷியாவிடம் இழப்பீடு கோருவதற்கான சட்ட உரிமை கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

உக்ரைனில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆட்சி செலுத்திவந்த ரஷிய ஆதரவு அதிபா் விக்டா் யானுகோவிச், மேற்கத்திய ஆதரவாளா்களின் தீவிர போராட்டங்கள் காரணமாக பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ரஷியா தப்பிச் சென்றாா். அதையடுத்து, உக்ரைன் ராணுவத்துக்கும், ரஷிய மொழி பேசுவோரை பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்கு உக்ரைன் ஆயுதக் குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போா் மூண்டது.

இந்தப் போரில் கிழக்கு உக்ரைன் ஆயுதக் குழுக்களுக்கு ரஷியா அனைத்துவிதமான உதவிகளையும் செய்ததுடன், ரகசியமாக படைகளை அனுப்பியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்த உள்நாட்டுப் போா் உச்சகட்டத்தில் இருந்தபோது, நெதா்லாந்தின் ஆம்ஸ்டா்டாம் நகரில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூரை நோக்கி 2014 ஜூலை 17-ஆம் தேதி சென்றுகொண்டிருந்த எம்ஹெச்17 விமானம், கிழக்கு உக்ரைன் பகுதியில் கிளா்ச்சிப் படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது. இதில், விமானத்தில் இருந்த 298 பேரும் உயிரிழந்தனா்.

ஆயுத தளவாடங்களையும் வீரா்களையும் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படும் பெரிய வகை ராணுவ விமானம் என்று தவறாகக் கருதி அந்த விமானத்தை கிழக்கு உக்ரைன் ஆயுதக் குழுவினா் சுட்டுவீழ்த்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.