;
Athirady Tamil News

காங்கோவை சூறையாடிய வெள்ளம்: கசாபா கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி!

0

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

காங்கோ வெள்ளம்
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசின் தெற்கு கிவு மாகாணத்தில் அமைந்துள்ள கசாபா கிராமம், கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தால் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை கொட்டித் தீர்த்த மழையின் காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி பரிதாபமாக 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சிகரமான தகவலின்படி, இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சிறு குழந்தைகள் மற்றும் வயதான முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

150 வீடுகள் சேதம்
மேலும், இந்த வெள்ளத்தில் சிக்கி 28 பேர் படுகாயமடைந்துள்ளனர். சுமார் 150 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

கசாபா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நீர்மட்டம் அபாய அளவை தாண்டியது. இதன் விளைவாக, பெரிய பாறைகள், மரங்கள் மற்றும் சேற்றுடன் கூடிய வெள்ள நீர் கிராமத்திற்குள் அதிவேகமாக புகுந்து வீடுகளை நொறுக்கியது.

இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக அப்பகுதியில் நீர் மூலம் பரவும் நோய்கள், சுவாச மண்டல தொற்றுகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற கடுமையான சுகாதார பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும் என்று உள்ளூர் அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.