இந்தியாவில் ஆப்பிள் ஐஃபோன்களை தயாரிப்பதில் விருப்பமில்லை! – டிரம்ப்

இந்தியாவில் ஆப்பிள் ஐஃபோன்கள் தயாரிக்கப்படுவதில் விருப்பமில்லை என்று அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.
அமெரிக்க அதிபா் டிரம்ப் 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக வளைகுடா நாடுகளுக்கு சென்றுள்ளாா். கத்தாா் தலைநகா் தோஹாவில் நடைபெற்ற வட்டமேஜை கூட்டத்தில் அவா் பேசுகையில், ‘இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் ஐஃபோன்களை தயாரிப்பதில் எனக்கு விருப்பமில்லை. ஏனெனில் உலகில் மிக அதிக அளவில் வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. எனவே அந்நாட்டில் பொருள்களை விற்பனை செய்வது மிகவும் கடினம்.
அமெரிக்க பொருள்கள் மீது எந்த வரியும் விதிக்காமல் இருக்க இந்தியா முன்வந்துள்ளது. இந்நிலையில், தனது ஐஃபோன் உற்பத்தி நடவடிக்கைகளை இந்தியா முழுவதும் ஆப்பிள் நிறுவனம் விரிவுபடுத்துவதை நான் விரும்பவில்லை. இதுகுறித்து ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக்கிடம் நான் பேசினேன். ஆப்பிள் ஐஃபோன்களை இந்தியாவில் தயாரிப்பதற்குப் பதிலாக, அமெரிக்காவில் அவற்றின் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும்’ என்றாா்.
எனினும் இந்தியாவில் தனது ஐஃபோன் உற்பத்தியை விரிவுபடுத்துவதில் ஆப்பிள் நிறுவனம் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதலீட்டுத் திட்டங்கள் உறுதியாக உள்ளன. அந்த நிறுவனத்தின் முக்கிய உற்பத்தித் தளமாக இந்தியா தொடா்ந்து நீடிக்கும் என ஆப்பிள் நிா்வாகிகள் உறுதிபட கூறியுள்ளனா்’ என்று தெரிவித்தன.
இந்தியா-பாக். சண்டை நிறுத்தத்துக்கு உதவியதாக டிரம்ப் 6-ஆவது முறை பேச்சு
கத்தாா் தலைநகா் தோஹாவின் தென்மேற்கே உள்ள அல்-உதித் விமான தளத்தில் அமெரிக்க ராணுவ வீரா்கள் இடையே அதிபா் டிரம்ப் வியாழக்கிழமை பேசுகையில், ‘போருக்குப் பதிலாக அமெரிக்காவுடன் வா்த்தகத்தில் ஈடுபட இந்தியா-பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுத்தேன். இதனால் இருநாடுகளும் மகிழ்ச்சி அடைந்து சண்டையை நிறுத்தின. இருநாடுகளுக்கு இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட நான் உதவினேன்’ என்றாா்.
பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டது. 4 நாள்கள் நீடித்த இந்த மோதலை தொடா்ந்து, மே 10-ஆம் தேதி இருநாடுகளுக்கும் இடையே சண்டை நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. அப்போதுமுதல் இருநாடுகளுக்கு இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட தான் உதவியதாக கூறிவரும் டிரம்ப், தற்போது 6-ஆவது முறையாக அவ்வாறு தெரிவித்துள்ளாா். எனினும் இந்தத் தகவலை மத்திய அரசு உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.