அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார்: பாகிஸ்தான் பிரதமர் இந்தியாவுக்கு அழைப்பு!

இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, அமைதி பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கம்ரா விமானப்படை தளத்திற்கு சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், இந்தியாவுடானான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக விருப்பம் தெரிவித்தார்.
அண்மையில் இந்தியாவுடனான சண்டையில் ஈடுபட்ட ராணுவ வீரர்களை கம்ரா விமானப்படை தளத்தில் ஷாபாஸ் ஷெரீஃப் சந்தித்தார். அவருடன் பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார், பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப், ராணுவத் தளபதி ஜெனரல் அசீம் முனீர், விமானப்படைத் தளபதி ஜாகீர் அகமது உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
அப்போது பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் பேசுகையில், ”இந்தியாவுடனான அமைதிக்கான பேச்சுவார்த்தையில் நீண்டகால காஷ்மீர் பிரச்னையும் அடங்கும்” என்று வலியுறுத்தினார்.
ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களை இந்தியா எப்போதும் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகளாக நிலைநாட்டி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தைக் கைவிடும் வரை பாகிஸ்தானுடன் சிந்து நதி நீர் பகிர்ந்துகொள்ளப்படாது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.