;
Athirady Tamil News

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆறாவது உபவேந்தராக பேராசிரியர் எஸ்.எம்.ஜுனைடீன் பதவியேற்பு

0

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆறாவது உபவேந்தராக அதே பல்கலைக்கழகத்தின் பொறியல் பீடத்தின் பீடாதிபதியாக மூன்று முறை பணியாற்றியிருந்த பேராசிரியர் எஸ்.எம்.ஜுனைடீன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டதன் நிமிர்த்தம் பல்கலைக்கழக உபவேந்தர் அலுவலகத்தில் திங்கட்கிழமை(26) அன்று பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் உள்ளிட்ட பல்கலைக்கழக உயர்மட்ட அதிகாரிகள் முன்னிலையில் தனது பதவியை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார்.

மருதமுனையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரி, பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் ஹோங்கோங் பல்கலைக்கழகம் போன்றவற்றில் கல்விகற்ற சிறந்த கல்விப்பின்புலத்தையும் நிருவாகத் திறமையையும் கொண்டவராவார்.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு மூவரை பரிந்துரை செய்வதற்கான விஷேட பேரவை ஒன்றுகூடல் கடந்த 2025.04.03 ஆம் திகதி பேராசிரியர் எம்.எம். பாஸில் தலைமையில் தென்கிழக்கு பல்கலைக்கழக கூட்டமண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 03/2023 ஆம் இலக்க சுற்றுநிருபத்தில் கோரப்பட்டுள்ளத்தான் அடிப்படையில் பேரவை உறுப்பினர்கள், விண்ணப்பதாரிகளுக்கு ஏழு அளவுகோல்களின் (Criteria) கீழ் புள்ளிகள் இட்டு, பெற்ற அதிகூடிய புள்ளிகள் அடிப்படையில் மூவரை தெரிவு செய்தனர்.
இதன் அடிப்படையில் முதலாவதாக பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீனும் இரண்டாவதாக பேராசிரியர் ஏ.எம். றஸ்மியும் மூன்றாவதாக கலாநிதி யூ.எல்.செய்னுடீன் ஆகியோர் புள்ளிகள் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர்.

பரிந்துரைக்கப்பட்டிருந்த மூவரில் முதலாவதாக தெரிவாகியிருந்த பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீனை ஜனாதிபதி சிபார்சு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின்போது பீடாதிபதிகளான கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா, பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.ஏ.எல்.ஏ. ஹலிம், இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் பீடாதிபதி அஷ் ஷேய்க் எம்.எச்.ஏ. முனாஸ், பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எம்.எச். ஹாரூன் மற்றும் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர், பதில் நிதியாளர் சி.எம். வன்னியாராச்சி உள்ளிட்டவர்களுடன் பேராசிரியர்களான எம்.ஐ.எம். ஹிலால். ஏ.எல்.எம். றியால், எஸ். சப்றாஸ் நவாஸ் ஆகியோரும் பிரயோக விஞ்ஞான பீடத்தின் முன்னாள் பீடாதிபதி யூ.எல். செய்னுடீன், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எம்.ஏ.எம். சமீம் உள்ளிட்ட பலரும் பங்கு கொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.