;
Athirady Tamil News

பெற்ற மகளை சூனியக்காரரிடம் விற்ற பெண்: நீதிமன்றம் வழங்கியுள்ள தண்டனை

0

தென்னாப்பிரிக்காவில், பெற்ற மகளை சூனியக்காரரிடம் விற்ற பெண்ணொருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன சிறுமி
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில், 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஜோஷ்லின் ஸ்மித் என்னும் ஆறு வயது சிறுமி காணாமல் போனாள்.

பொலிசாருடன் இணைந்து பொதுமக்களும் ஜோஷ்லினைத் தேடியும் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், ஜோஷ்லினின் தாயாகிய கெல்லி (Racquel “Kelly” Smith, 33) மீது அவரது பக்கத்துவீட்டுப் பெண்ணான லோரென்ஷியா பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார்.

தான் தன் மகளை சூனியக்காரர் ஒருவரிடம் விற்றுவிட்டதாக கெல்லி கூற, ஜோஷ்லினின் ஆசிரியை ஒருவரும், ஜோஷ்லின் ஒரு கப்பலில், ஒரு கன்டெய்னரில் இருப்பதாகவும், மேற்கு ஆப்பிரிக்கா நோக்கி அவள் செல்வதாகவும் கெல்லி தன்னிடம் கூறியதாக தெரிவிக்க, கெல்லி பொலிசாரிடம் சிக்கினார்.

விசாரணையில், ஜோஷ்லினுடைய கண்கள் மற்றும் தோலுக்காக, அவளை ஒரு சூனியக்காரர் கேட்டதாகவும், தான் 750 பவுண்டுகளுக்காக தன் மகளை விற்றுவிட்டதாகவும் கூறியுள்ளார் கெல்லி.

இந்த சூனியக்காரர்கள் சில நேரங்களில் தங்கள் பூஜைக்காக மனித உடல் உறுப்புகளை பயன்படுத்துவதுண்டாம். அப்படிப்பட்ட ஒருவரிடம்தான் தன் மகள் ஜோஷ்லினை விற்றிருக்கிறார் கெல்லி.

ஆயுள் தண்டனை
இந்த விடயம் வெளியானதைத் தொடர்ந்து, கெல்லி மற்றும் அவளுடைய குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த அவரது காதலனான Jacquin Appollis மற்றும் இவர்களுடைய நண்பரான Steveno van Rhyn ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள்.

எட்டு வார விசாரணைக்குப் பிறகு, குழந்தை ஜோஷ்லின் வழக்கில் மூவரும் குற்றவாளிகள் முடிவு செய்துள்ள நீதிமன்றம், தற்போது அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேலும், கடத்தல் குற்றத்துக்காக அவர்கள் மூன்று பேருக்கும் கூடுதலாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

விடயம் என்னவென்றால், இதுவரை குழந்தை ஜோஷ்லின் உயிருடன் இருக்கிறாளா என்பது தெரியவில்லை. அத்துடன் அவளது உடலும் கிடைக்கவில்லை என்பதுதான் சோகம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.