போக்குவரத்து சட்டவிதிகளை மீறியவர்களின் மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டது.-சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் சம்பவம்
பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் (07) சனிக்கிழமை புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று தலைக்கவசம் இன்றியும் சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இன்றி பயணித்தமை உள்ளிட்ட பொது போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் மோட்டார் சைக்கிள்கள் உட்பட அதனை ஓட்டிய சந்தேக நபர்கள் பெரிஸாரினால் சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.
குறித்த சோதனை நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் வழிகாட்டலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் தலைமையிலான பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதடன் பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட சான்றுப் பொருள்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.
மேலும் இன்றைய தினம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் சுமார் 10 வீதி விபத்துக்கள் இடம்பெற்றிருந்ததுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




