கல்லுமலையும் வெடுக்குநாறியும் எங்கள் சொத்து: பௌத்தமயமாக்கலை நிறுத்துங்கள்! வவுனியாவில் போராட்டம்
கி.வசந்தன்
கல்லுமலையும் வெடுக்குநாறியும் எங்கள் சொத்து. பௌத்தமயமாக்கலை நிறுத்துங்கள் எனத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் போராட்டம் ஒன்று இன்று (30.12) முன்னெடுக்கப்பட்டது.
தையிட்டியில் ஜனநாயக ரீதியாக போராடியவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், வவுனியா உட்பட வடக்கு கிழக்கில் புதிதாக அமைக்கப்படும் விகாரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இவ் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,
சட்டவிரோதமாக தையிட்டியில் அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடியவர்கள் மிலேச்சத்தனமாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு மதகுரு என்று கூட பாராமல் மோசமான முறையில் வேலன் சுவாமி நடாத்தப்பட்டிருந்தார். இது தமிழ் மக்கள் மீதான ஒரு அடக்குமுறை செயற்பாடாகவே உள்ளது.
வடக்கில் குருந்தூர் மலை, வெடுக்குநாறி மலை, தையிட்டி தற்போது வவுனியா கல்லுமலை என்பன ஆக்கிரமிப்பு செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. பௌத்த துறவிகளே இப்படியான கலவரங்கள் ஏற்ப்படுவதற்கு தூண்டுகோலாக உள்ளனர். எனவே மறுக்கப்படும் எமது உரிமைகளை அடைவதற்காக நாம் தொடர்ச்சியாக போராட்டங்களை செய்வோம் என்றனர்.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களையும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரிய பதாதைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.





