மியான்மரில் புத்த மடத்தின் மீது ராணுவம் வான்வழித் தாக்குதல்? 23 பேர் கொலை!

மியான்மர் நாட்டின் மத்திய மாகாணத்தில், அமைந்திருந்த புத்த மடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அங்கு தஞ்சமடைந்திருந்த மக்களில் 23 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சகாயிங் மாகாணத்தில் உள்நாட்டு கிளர்ச்சிப்படைக்கும், மியான்மர் ராணுவத்துக்கும் இடையில் கடந்த சில வாரங்களாக மோதல்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அம்மாகாணத்தின் லின் தா லூ கிராமத்தில் அமைந்திருந்த புத்த மடத்தின் மீது நேற்று முன்தினம் (ஜூலை 10) நள்ளிரவு போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதில், 4 குழந்தைகள் உள்பட 23 பேர் கொல்லப்பட்டதாக, உள்நாட்டு கிளர்ச்சிப்படை நேற்று (ஜூலை 11) தெரிவித்துள்ளது. ஆனால், பலியானோர் எண்ணிக்கை 30 என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருதரப்புக்கும் இடையில் நடைபெறும் மோதல்களிலிருந்து தப்பித்து மடத்தில் தஞ்சமடைந்திருந்த சுமார் 150-க்கும் மேற்பட்டோர் இரவு உறங்கிக்கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால், 30-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும், அதில் 10 பேரது உடல்நிலையானது தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், கிளர்ச்சிப்படைகளை மட்டுமே குறிவைத்து தங்களது தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகக் கூறும், மியான்மர் ராணுவம்தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால், இதுகுறித்து இதுவரை மியான்மர் ராணுவம் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.
கடந்த 2021-ம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி தலைமையிலான அரசை கவிழ்த்து, ராணுவத்தின் ஆட்சி அமைக்கப்பட்டது முதல் மியான்மரில் உள்நாட்டு மோதல்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.