;
Athirady Tamil News

தென் கொரியா வெள்ளம், நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு!

0

தென் கொரியா நாட்டில், கடந்த வாரம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தென் கொரியாவின், பல்வேறு இடங்களில் கடந்த ஜூலை 16 முதல் ஜூலை 20 ஆம் தேதி வரை தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால், அந்நாட்டின் முக்கிய மாகாணங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமானோர் மாயமானதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சான்சியோங் மாகாணத்தில் மாயமான 3 பேர் மற்றும் காபியோங் மாகாணத்தில் மாயமான ஒருவர் என மொத்தம் 4 பேரது உடல்கள், தற்போது மீட்கப்பட்டுள்ளன. இதன்மூலம், மாயமானதாகக் கருதப்பட்ட 9 பேரில், மீதமுள்ள 5 பேரை தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மோப்ப நாய்கள், அதிநவீன இயந்திரங்கள் ஆகிய பயன்படுத்தி இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை அந்நாட்டு மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.

இத்துடன், தென் கொரியாவை புரட்டியெடுத்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 21-க்கும் மேற்பட்டோர் பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில், அதிகப்படியாக தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர்.

மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால், தென் கொரியா ராணுவத்தில் இருந்து சுமார் 2,500 வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

முன்னதாக, கனமழை தொடங்கியது முதல் 14,000-க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கைவைக்கப்பட்டனர்.

அதில், 11,000-க்கும் அதிகமானோர் தங்களது வசிப்பிடங்களுக்குத் திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.