அமெரிக்காவிலிருந்து வந்த விமானத்தில் கரப்பான் பூச்சிகள்: ஏர் இந்தியா மன்னிப்பு
மும்பை வந்த விமானத்தில் கரப்பான் பூச்சி இருந்ததால் ஏர் இந்தியா மன்னிப்பு கோரியுள்ளது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து ஏஐ180 என்ற ஏர் இந்தியாவின் விமானம், கொல்கத்தா வழியாக மும்பை வந்தது.
அந்த விமானத்தில் இரண்டு கரப்பான் பூச்சிகள் இருந்ததை பயணிகள் கவனித்துள்ளனர். உடனே இதுகுறித்து அவர்கள் ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளனர்.
அதன் பின்னர் குறித்த பயணிகளுக்கு இருக்கை மாற்றித் தரப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏர் இந்தியா இதற்கு மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “சான் பிரான்சிஸ்கோவில் இருந்து கொல்கத்தா வழியாக மும்பை வந்த ஏஐ180 விமானத்தில் துரதிர்ஷ்டவசமாக, சில சிறிய கரப்பான் பூச்சிகள் இருந்ததால் 2 பயணிகள் சிரமப்பட்டனர். எங்கள் ஊழியர்கள் உடனடியாக அந்த பயணிகளை வேறு இருக்கைகளுக்கு மாற்றினர்.
கொல்கத்தாவில் எரிபொருள் நிரப்பியபோது விமானம் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் விமானம் சரியான நேரத்தில் மும்பைக்கு புறப்பட்டது. சுத்தம் செய்தபோதிலும் பூச்சிகள் நுழைந்துவிடுகின்றன.
இதுதொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது, மேலும் இதுபோன்று மீண்டும் நிகழாமல் தடுக்க சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.