பரஸ்பர பாலியல் உறவுக்கான வயது வரம்பு 18 ஆகவே தொடர வேண்டும் – சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்
பரஸ்பர சம்மதத்துடன் கூடிய பாலியல் உறவுக்கான வயது வரம்பை 18-ல் இருந்து 16 ஆக குறைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில், வழக்குகளின் உதவிக்காக நியமிக்கப்பட்டுள்ள மூத்த பெண் வக்கீல் இந்திரா ஜெய்சிங் பரிந்துரைத்து இருந்தார்.
இதற்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி மூலம் மத்திய அரசு எழுத்து மூலம் பதிலளித்து இருக்கிறது. அதில், பரஸ்பர சம்மதத்துடன் கூடிய பாலியல் உறவுக்கான வயது வரம்பு 18 ஆகவே தொடர வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறது.
அதில், ‘சம்மத வயதை நீர்த்துப்போகச் செய்வது அல்லது இளம் பருவ காதல் என்ற போர்வையில் விதிவிலக்குகளை அறிமுகப்படுத்துவது சட்டப்படி நியாயமற்றது மட்டுமின்றி, ஆபத்தானதும் ஆகும்’ என குறிப்பிட்டு உள்ளது.
மேலும் இதில் சீர்திருத்தம் என்ற பெயரிலோ, இளம் பருவத்தினரின் உடல் சார்ந்தோ எடுக்கப்படும் எந்த முடிவுகளும் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் பல்லாண்டு கால முன்னேற்றத்தைப் பின்னுக்குத் தள்ளுவதாகவும், போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா போன்ற சட்டங்களின் வீரியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் இருக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது.