;
Athirady Tamil News

இந்தியா – பாக். சண்டை: அமெரிக்காவின் வர்த்தக ரீதியான மிரட்டலால் முடிவுக்கு வந்தது! -டிரம்ப்

0

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான சண்டை என்னுடைய முயற்சியாலே முடிவுக்கு வந்தது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்தார்.

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய படைகள் தாக்கின. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் எதிர்வினையாற்றியதால் இரு நாடுகளுக்குமிடையில் சண்டை மூண்டது. அதன்பின், இச்சண்டை சில நாள்களில் முடிவுற்றதாக திடீரென அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான சண்டை என்னுடைய முயற்சியாலே முடிவுக்கு வந்தது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசி வருகிறார்.

இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்: “அனைத்து சண்டைகளையும் நானே நிறுத்தினேன். நான் நிறுத்தியதில் மிகப்பெரிய போர் எதுவெனில், அது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்ற சண்டையே” என்று குறிப்பிட்டார்.

மேலும், அவர் பேசியதாவது: “இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போர் அடுத்த நிலைக்குச் சென்றதுடன், அது அணு ஆயுதப் போராகவும் வெடிக்க நேர்ந்தது. ஆனால், அப்போது அமெரிக்கவாகிய நாங்கள் மேற்கண்ட இருதரப்பிடமும், ‘நீங்கள் எங்களுடன் வர்த்தகம் மேற்கொள்ள விரும்புகிறீர்களா? இப்படி நீங்கள் சண்டையிட்டுக்கொண்டால், உங்களுடன் எவ்வித வர்த்தகமும் மேற்கொள்ளமாட்டோம். உங்களுக்கு 24 மணி நேரம் அவகாசம் அளிக்கப்படுகிறது. அதற்குள் முடித்துக் கொள்ளவும்’ என்றோம்.

அதற்கு அவர்கள் தரப்பிலிருந்து, ‘இனிமேலும் சண்டை தொடராது’ என்று தெரிவித்தார்கள். இதனை நான் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டிருக்கிறேன். சண்டையை நிறுத்த வர்த்தகத்தை பயன்படுத்தினேன்” என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.