;
Athirady Tamil News

பிரபல பாடகர் ஸுபீன் கார்க் விபத்தில் பலி! சிங்கப்பூரில் சாகச விளையாட்டில் நேர்ந்த சோகம்!

0

சிங்கப்பூரில் சாகச விளையாட்டில் ஈடுபட்ட பிரபல அசாம் பாடகர் ஸுபீன் கார்க், விபத்தில் சிக்கி பலியானார்.

அசாமீஸ் திரையுலகில் முன்னணி பாடகராகத் திகழ்ந்தவர் ஸுபீன் கார்க் (வயது 52). அசாமீஸ், ஹிந்தி மற்றும் வங்காளம் ஆகிய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை இவர் பாடியுள்ளார். ”யா அலி” எனும் இவரது பாடல் மாபெரும் வெற்றியடைந்ததால், மொழிகளைக் கடந்த ரசிகர்கள் இவருக்கு ஏராளம்.

இந்நிலையில், சிங்கப்பூரில் நடைபெறும் நார்த் ஈஸ்ட் (வடகிழக்கு) திருவிழாவில் பாடுவதற்காக, ஸுபின் கார்க் சென்றிருந்தார். அங்குள்ள சுற்றுலாத் தளங்களுக்குச் சென்ற அவர், நேற்று (செப்.18) இரவு ஆழ்கடல் சாகசத்தில் (ஸ்கூபா டைவிங்) ஈடுபட்டுள்ளார்.

அப்போது, திடீரென விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய ஸுபினை, சிங்கப்பூர் காவல் துறையின் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவர் பாராகிளைடிங் எனும் சாகச விளையாட்டில் ஈடுபட்டபோது கடலில் விழுந்து படுகாயமடைந்ததாகவும் சில தகவல்கள் கூறுகின்றன. இதையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஸுபீன் சிகிச்சை பலனின்றி பலியானார்.

பாடகர் ஸுபீன் கார்கின் திடீர் மரணம் அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், திரையுலகினர் மட்டுமின்றி பல்வேறு அரசியல் தலைவர்களும் ஸுபினின் குடும்பத்துக்கு தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, 30 ஆண்டுகளுக்கும் மேலாக அசாமீஸ் திரையுலகில் முன்னணி பாடகராகத் திகழ்ந்த ஸுபின் கார்க், இசையமைப்பாளராகவும், நடிகராகவும், இயக்குநராகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.