;
Athirady Tamil News

இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: ஐ.நா. அவையில் 50வது முறை கூறிய டிரம்ப்!

0

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் பேசியுள்ளார்.

அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்க தனக்கு வேண்டும் என சிலர் கூறுவதாகவும், ஆனால், போர் இல்லாத உலகில், குழந்தைகள் தங்கள் பெற்றோரின் அரவணைப்பில் வளருவதை மட்டுமே உண்மையான பரிசாகத் தான் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அவையின் 80 வது பொதுக்குழு கூட்டத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்றுப் பேசினார். இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற பிறகு இக்கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்கிறார்.

உலக நாடுகளின் தலைவர்கள் முன்பு போரால் நிலவும் அசாதாரண சூழல் குறித்து அவர் பேசியதாவது,

”கடந்த ஏழு மாதங்களில் மட்டும், முடிவுறாத 7 போர்களை நிறுத்தியுள்ளேன். முடிவில்லாத போர் என அவர்கள் கூறினார்கள். சில நாடுகளில் 31 ஆண்டுகளாக நீடித்து வந்தது. சில நாடுகளில் 28 ஆண்டுகளாக நடைபெற்றது. இரக்கமற்ற முறையில் வெடித்த இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். கம்போடியா – தாய்லாந்து, கொசோவா – செர்பியா, இஸ்ரேல் – ஈரான், எகிப்து – எத்தியோப்பியா மற்றும் அமெரிக்கா – அஜர்பைஜான் நாடுகளின் போர்களும் அடங்கும்” எனப் பேசினார்.

இதோடுமட்டுமின்றி இந்தியா – பாகிஸ்தான் இடையே நீடித்து வந்த போரை இரவு முழுவதும் மத்தியஸ்தம் செய்து முடிவுக்கு கொண்டுவந்ததாகவும், அவர்கள் போரை நிறுத்த ஒப்புக்கொண்டதாக மே 10ஆம் தேதி சமூக வலைதளத்தில் அறிவித்ததாகவும் குறிப்பிட்டார். இதன்மூலம், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியுள்ளதாக அதிபர் டிரம்ப், கிட்டத்தட்ட 50வது முறையாகப் பேசியுள்ளார்.

பாகிஸ்தான் உடனான போரில் எந்தவொரு மத்தியஸ்தமும் நடைபெறவில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். அதோடுமட்டுமின்றி, இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாகக் குறிப்பிட்டுப் பேச வேண்டாம் என இந்தியா சார்பில் கேட்டுக்கொண்ட பிறகும் அதிபர் டிரம்ப் தொடர்ந்து சர்வதேச மேடைகள் பலவற்றிலும் அவ்வாறு கூறி வருகிறார்.

நோபல் பரிசு மீதான பேச்சு குறித்து பேசிய டிரம்ப், ”இந்த சாதனைகளுக்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என பலர் கூறி வருகின்றனர். ஆனால், போர் இல்லாத சூழலில் பெற்றோர்கள் அரவணைப்பில் குழந்தைகள் வளர்வதே என்னைப் பொருத்தவரையில் மிகப்பெரிய பரிசாகக் கருதுகிறேன். என்னுடைய கவலை பரிசுகளை வெல்வது அல்ல, உயிர்களைக் காப்பதே” எனக் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.