மாஸ்கோவில் புடினுடன் சிரியாவின் இடைக்கால அதிபர் சந்திப்பு!
ரஷியா தலைநகர் மாஸ்கோவில், அதிபர் விளாதிமீர் புடினை, சிரியாவின் இடைக்கால அதிபர் அஹமத் அல் – ஷரா நேற்று (அக். 15) நேரில் சந்தித்துள்ளார்.
சிரியாவில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த அசாத் குடும்பத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதும், முன்னாள் அதிபர் பஷார் அல் – அசாத் நாட்டை விட்டு தப்பியோடி ரஷியாவில் குடும்பத்துடன் தஞ்சமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, அசாத் அரசின் படைகளுக்கு எதிராக உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வந்த போராளிக்குழுவின் தலைவரான அஹமது அல் – ஷரா, சிரியாவின் இடைக்கால அதிபராகப் பதவியேற்றார்.
இந்த நிலையில், சர்வதேச நாடுகளின் ஆதரவைக் கோரி வரும் சிரிய அதிபர் அல் – ஷரா, ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் ரஷிய அதிபர் புடினை, நேற்று நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பில், இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புகள் மற்றும் முதலீடுகள் குறித்து உரையாடியதாகக் கூறப்பட்டுள்ளது. இத்துடன், சிரியாவில் உள்ள ரஷியாவின் விமானப் படை மற்றும் கடற்படை தளங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றுள்ளன.
முன்னதாக, சிரியாவில் நீண்டகாலமாக நடைபெற்ற உள்நாட்டுப் போரில் முன்னாள் அதிபர் பஷார் அல் – அசாதின் அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷியாவின் படைகள் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.