;
Athirady Tamil News

சூடான்: ட்ரோன் தாக்குதலில் 43 குழந்தைகள் உள்பட 79 பேர் பலி!

0

சூடான் நாட்டில் கிளர்ச்சியாளர்களின் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படை நடத்திய தாக்குதலில் 79 பேர் பலியாகினர்.

சூடான் நாட்டின் தெற்கு கோர்டோஃபான் மாநிலத்தில் உள்ள கலோகி நகரில் மழலையர் பள்ளி, மருத்துவமனை, மக்கள் குடியிருப்புப் பகுதி உள்ளிட்ட இடங்களில் கிளர்ச்சியாளர்களின் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படை (RSF) வியாழக்கிழமையில் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 43 குழந்தைகள் உள்பட 79 பேர் பலியாகினர்.

இந்தத் தாக்குதலுக்கு ஆர்எஸ்எஃப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், தாக்குதல் நடத்தியவர்களை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்றும் மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.

சூடான் ராணுவத்துக்கும் ஆர்எஸ்எஃப்-க்கும் 2023-ல் மோதல் ஏற்பட்டு, தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வரும்நிலையில், தற்போது மழலையர் பள்ளி, மருத்துவமனை மீதும் தாக்குதல் நடத்தியிருப்பதற்கு ஐநா அவை கண்டனம் தெரிவித்துள்ளது.

சூடானில் குழந்தைகள் மீதான தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் (UNICEF) கண்டனம் தெரிவித்த நிலையில், “இந்தத் தாக்குதல் குழந்தைகள் உரிமைகளின் கொடூரமான மீறல். மோதல்களில் ஒருபோதும் குழந்தைகள் இழக்கப்படக் கூடாது.

குழந்தைகளைக் கொல்வதும் துன்புறுத்துவதும், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்களும் குழந்தைகளின் உரிமைகளை கடுமையாக மீறுவதாகும்’’ என்று கூறியது.

2023 ஏப்ரலில் சூடான் ராணுவத்துக்கும் ஆர்எஸ்எஃப்-க்கும் இடையிலான மோதலில் 40,000-க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், 1.2 கோடிக்கும் அதிகமானோர் புலம்பெயர்ந்ததாகவும் உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.